சமபந்தி தெரியும்... அது என்ன ஜமாபந்தி.?



ஜமாபந்தி என்றால் என்ன? ஜமாபந்தியின் நோக்கம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தற்போதுள்ள தலைமுறை, 'ஸ்மார்ட் போன்' மூலமாகவே, அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பித்து பெற்றுவிடுகிறது. இவ்வளவு ஏன்? ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் எவ்வளவு எளிதாக மாறியுள்ளது. இப்படியான தருணத்தில், சமபந்தி விருந்து நடப்பது போல், 'ஜமாபந்தி' என்றால், ஏதோ தாலுகா அலுவலகத்தில நடக்கும் விருந்தோ என்று கூட, இளம் தலைமுறையினர் நினைக்கலாம்.

வருவாய்த்துறை என்பது, நாட்டின் நிர்வாகத்துறையாக விளங்குகிறது. அன்றைய காலத்தில், விவசாயிகளிடம் நிலவரி வசூல் செய்யவும், விளைச்சலுக்கு ஏற்ற வரிவசூல் செய்வது மட்டுமே, வருவாயாக இருந்தது. நிலவரி வசூல் மட்டுமே, வருவாய்த்துறையின் பணியாக இருந்தது.

நாளடைவில், நில பதிவேடு பராமரிப்பு, இறப்பு - பிறப்பு பதிவேடு பராமரிப்பு, சான்றிதழ் வழங்குவது, நலத்திட்ட உதவி வழங்குவது என மாற்றம்பெற்றது. வருவாய்த்துறையில், வருவாய் கிராமம், உள்வட்டம்(பிர்கா), தாலுகா, கோட்டம், மாவட்டம் என்று, பல அடுக்காக இயங்குகிறது.

கிராம நிர்வாக அளவிலும், நில வருவாய் ஆய்வாளர், தாலுகா அலுவலக அளவில், 24 வகையான பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. பசலி ஆண்டு எனப்படும், விளைச்சலை கணக்கிடும், ஜூலை - ஜூன் வரையிலான விளைச்சல் கணக்கிடப்படுகிறது. அவற்றை சரிபார்த்து தணிக்கை செய்து ஒப்புதல் அளிக்க, ஜமாபந்தி நடத்தப்படுகிறது.

வருவாய் தீர்வாயம் என்று பெயர் வைத்திருந்தாலும், 'ஜமாபந்தி' என்பதே பரிச்சையமான பெயராக இருக்கிறது. கிராம நிர்வாக அலுவலரின் அனைத்து பதிவேடுகளை சரிபார்த்து, ஜமாபந்தி அலுவலர் ஒப்புதல் அளிக்கிறார். அந்தகாலத்தில், அனைத்து அரசு அலுவலர்களையும், ஜமாபந்தில் மட்டுமே, ஒரேநாளில் பார்க்க முடியும்.

கிராம உதவியாளரில் துவங்கி, தாசில்தார் மற்றும் ஜமாபந்தி அலுவலர் வரை, தாலுகா அலுவலகத்தில் முகாமிட்டு, பதிவேடுகளுக்கு ஒப்புதல் அளிக்கின்றனர். அதுமட்டுமல்ல, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதும் ஜமாபந்தியின் மற்றொரு சிறப்பு.

நில ஆக்கிரமிப்புக்கு அபராதம் விதிக்கும் 'பி- மெமோ'வை, மக்கள் 'பீமா' என்றும், மரத்துக்கான பட்டாவை (2சி), துாசி பட்டா என்றும், அயன்பட்டா, கண்டிஷன்பட்டா என்றெல்லாம் கூறும் அளவுக்கு பெயர் மருவியிருப்பதை, பலரும் ரசனையோடு பார்க்கின்றனர்.

நிலத்தை அளவீடு செய்ய, எத்தனையோ நடைமுறை வந்திருந்தாலும், அளவு சங்கிலி மற்றும் கோண அளவு பார்க்கும் கட்டைகளும், ஜமாபந்தியில் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றை, சரிபார்த்து, ஜமாபந்தி அலுவலர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அடுத்த ஆண்டு அளவைக்கு பயன்படுத்த முடியும்.

வருவாய்த்துறை நிர்வாகம் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பெற்று, வளர்ச்சி பெற்றுள்ளது. இதனால், பாரம்பரிய அடையாளமாக இருந்த ஜமாபந்தி, இன்று சம்பிரதாய சடங்காக மாறிவிட்டது என்றே விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

நிலத்தை அளவீடு செய்ய, எத்தனையோ நடைமுறை வந்திருந்தாலும், அளவு சங்கிலி மற்றும் கோண அளவு பார்க்கும் கட்டைகளும், ஜமாபந்தியில் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஜமாபந்தி 
  1. ஜமாபந்தியின் இன்னொரு பெயர்- வருவாய் தீர்வாயம்
  2. ஜமாபந்தி எங்கு நடைபெறும் , வட்டாட்சியர் அலுவலகம்
  3. ஜமாபந்தி எந்த நாட்களில் - வருடா வருடம் ஏப்ரல்-ஜீன் 30க்குள் நடைபெறும்.
  4. 3-ல்கண்ட நாட்களுக்குள் முடிக்காவிடில் மேல் நடத்த யாரிடம் உத்தரவு பெறவேண்டும் - நில நிர்வாக ஆணையர்
ஜமாபந்தியின் நோக்கம்:
  • அரசுக்கு சொந்தமான எல்லா வகையான சொத்துக்களும் வருவாய்நிலை ஆணைகளில் கண்டபடி நிர்வகிக்கப்படுகிறதா என்பதை கண்டறிவதே
  • வ.நி.ஆணை எண்.12ல் கண்டபடி அரசுக்கு வரவேண்டிய நிலத்தீர்வை மற்றும் அனைத்து வருவாய் கணக்குகளும் சரியாக எழுதப்பட்டுள்ளனவா?
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான புள்ளி விபரங்கள் தக்கமுறையில் தரப்பட்டுள்ளனவா?
  • கிராமஃதாலுகா பதிவேடுகள் ஒழுங்காக பராமரிக்கப் பட்டுள்ளனவா?
  • அரசு அலுவலர்கள் அரசு எதிர்பார்க்கும் அளவில் பணி செய்துள்ளனரா?
  • நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை, நில ஒப்படை மற்றும் கிராம பணிகள் ஒழுங்காக நடைமுறை படுத்தப் பட்டுள்ளனவா?
  • சமூக பாதுகாப்பு திட்டங்கள் பொதுமக்களுக்கு சரியாக சென்று அடைந்துள்ளனவா?
  • அரசு பாக்கிகள் சரியான முறையில் தயாரிக்கப் பட்டுள்ளனவா?
ஜமாபந்தி நடத்தும் அலுவலர்
  1. வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவர் தகுதியுடைய மற்ற அலுவலர்
  2. மாவட்ட வருவாய் அலுவலர் (5ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 தாலுகா)
  3. மாவட்ட ஆட்சியர் (5ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 தாலுகா)
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments