ஆகஸ்டு 15-ந் தேதி முதல் அனைத்து ஊராட்சிகளிலும் ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை கட்டாயம் - மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம்!!



ஆகஸ்டு 15-ந் தேதி முதல், அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறையை கட்டாயமாக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
 
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பல்வேறு வகையான வரிகள் மற்றும் கட்டணங்களை பொதுமக்கள் மின்னணு முறையில் செலுத்தி வருகிறார்கள். ஆனால், ஊராட்சிகளில் பெரும்பாலும் ரொக்கப்பணம் மூலமே வரி மற்றும் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்துவது கட்டாயம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆகஸ்டு 15-ந் தேதி முதல், நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளும் மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறையை பயன்படுத்துவது கட்டாயம் ஆகும்.

அனைத்து ஊராட்சிகளும் யு.பி.ஐ. வசதி கொண்ட ஊராட்சிகளாக அறிவிக்கப்பட வேண்டும். முதல்-மந்திரி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் யு.பி.ஐ. வசதியை தொடங்கி வைக்க வேண்டும்.

யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் வசதியை அளிக்கும் கூகுள்பே, போன்பே, பேடிஎம், பீம், மொபிக்விக், வாட்ஸ்அப் பே, அமேசான் பே, பாரத் பே போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை இம்மாதம் 30-ந் தேதி (இன்று) அனைத்து ஊராட்சிகளும் அழைத்துப்பேச வேண்டும்.

அவற்றில் தங்களுக்கு பொருத்தமான நிறுவனத்ைத ஜூலை 15-ந் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். ஊராட்சி முழுவதிலும் இயங்கும் ஒரே நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

யு.பி.ஐ. வசதியை பயன்படுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட, வட்ட அளவில் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். பணம் செலுத்துவதை உரியமுறையில் கண்காணித்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மின்னணு முறையில் பணம் செலுத்துவது ஊழலை கட்டுப்படுத்த உதவும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரி கபில் மொரேஷ்வர் பட்டீல் கூறியுள்ளார்.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் சுனில்குமார், ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “98 சதவீத ஊராட்சிகள் ஏற்கனவே யு.பி.ஐ. வசதியை பயன்படுத்த தொடங்கி விட்டன. ரொக்கம் மற்றும் காசோலையை பயன்படுத்துவது கிட்டத்தட்ட நின்று விட்டது” என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments