9 லட்சம் பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் 6 கோடியே 12 லட்சம் வாக்காளர்கள் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்




தமிழ்நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 12 லட்சம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒவ்வொரு காலாண்டிலும் புதுப்பிப்பு

இந்திய தேர்தல் கமிஷன் ஜனவரி 1-ந் தேதியை மட்டுமல்லாது ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளை, தொடர்ச்சியான தகுதி ஏற்படுத்தும் (வாக்காளராக) நாட்களாக நிர்ணயித்துள்ளது. இளைஞர்கள் அவர்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தி உள்ளது. இனி, ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும்.

அதோடு, 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கு பிறகு, உரியவருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.

9.11 லட்சம் பெயர் நீக்கம்

1.4.2023 அன்றைய தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட தொடர் திருத்த கால வாக்காளர் பட்டியல் (2-ம் காலாண்டு) 31-ந் தேதி (நேற்று) வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த அல்லது இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி 5-ந் தேதியில் இருந்து பெறப்பட்டு வந்தன.

இந்த தொடர் திருத்த காலத்தில் (2-ம் காலாண்டு) வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களாக 1 லட்சத்து 23 ஆயிரத்து 64 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. 51 ஆயிரத்து 295 வாக்காளர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம் செய்துள்ளனர். 9 லட்சத்து 11 ஆயிரத்து 820 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டை பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டு உள்ளன. 2 லட்சத்து 60 ஆயிரத்து 103 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மொத்தம் 6.12 கோடி

இந்த தொடர் திருத்த கால வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 12 லட்சத்து 36 ஆயிரத்து 696 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 1 லட்சத்து 18 ஆயிரத்து 904; பெண் வாக்காளர்கள் 3 கோடியே 11 லட்சத்து 9 ஆயிரத்து 813; மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,979 பேர்) பதிவு செய்யப்பட்டு உள்ளனர். (முதல் காலாண்டு பட்டியலில் 6.20 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.)

31-ந் தேதி (நேற்று) அன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 51 ஆயிரத்து 77 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3.26 லட்சம்; பெண்கள் 3.24 லட்சம்; மூன்றாம் பாலினத்தவர் 111).

இதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4 லட்சத்து 54 ஆயிரத்து 919 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2.26 லட்சம்; பெண்கள் 2.28 லட்சம்; மூன்றாம் பாலினத்தவர் 115).

தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 69 ஆயிரத்து 292 ஆவர். (ஆண்கள் 87 ஆயிரத்து 924; பெண்கள் 81 ஆயிரத்து 309; மூன்றாம் பாலினத்தவர் 59). இதற்கு அடுத்தப்படியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 69 ஆயிரத்து 750 ஆவர் (ஆண்கள் 83 ஆயிரத்து 669; பெண்கள் 86 ஆயிரத்து 79; மூன்றாம் பாலினத்தவர் 2).

எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

இந்த தொடர் திருத்தக் கால வாக்காளர் பட்டியலில் 3,400 வெளிநாடுவாழ் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. வாக்காளர் பட்டியலில் இதுவரை 4 லட்சத்து 34 ஆயிரத்து 583 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டுள்ளார்கள். மேலும், 18-19 வயதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 80 ஆயிரத்து 612 ஆகும்.

வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்த்துக்கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. 1.4.2023 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்; இணையம் மூலமாக https://voters.eci.gov.in/ என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம். ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து “Voter Helpline App” செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தகவலுக்கு....

சிறப்பு சுருக்கமுறை திருத்த காலம் மற்றும் தொடர் திருத்த காலங்களில் பெறப்பட்ட முன்கூட்டிய விண்ணப்பங்கள் தொடர் திருத்த காலத்தின் போது அந்தந்த காலாண்டில் உரிய வாக்காளர் பதிவு அலுவலரால் பரிசீலிக்கப்படும். வாக்காளர் பட்டியலின் மென் நகலை (புகைப்படமின்றி) வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.100 வீதம் கட்டணம் செலுத்தி பெறலாம்.

இந்திய தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் மாவட்ட தொடர்பு மையங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 1800-4252-1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுடன் மாநில தொடர்பு மையம் இயங்கி வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments