அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரி தேர்வுகளை நடத்தி, ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியிட முடிவு அமைச்சர் பொன்முடி அறிவிப்பு




அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரி தேர்வுகளை நடத்தி, ஒரே நாளில் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

மாநில கல்வி கொள்கையில் உயர்கல்வி சார்ந்த திட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார். இதில் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், கல்லூரி கல்வி இயக்குனர் கீதா, பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டத்தின் நிறைவில் அமைச்சர் க.பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாடத்திட்டங்கள்

பாடத்திட்டங்களை பொறுத்தவரையில், எல்லா பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று உயர்கல்வி ஆணையத்திடம் சொல்லி, அவர்களும் பாடத்திட்டங்களை உருவாக்கி கொடுத்து இருக்கிறார்கள். பல்கலைக்கழகங்கள் அதனை முழுமையாக பின்பற்ற வேண்டும். குறிப்பாக, தமிழ், ஆங்கில மொழி பாடத்திட்டங்களை பொறுத்தவரையில், ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அதன்படி, முதல் 2 செமஸ்டர்களில் தமிழ் இலக்கிய வரலாறு ஆங்கிலேயர் வருகைக்கு முன், பின் என 2 பகுதிகளாக நடத்தப்பட உள்ளது.

3-வது செமஸ்டரில் தமிழ்நாட்டின் வரலாறும், பண்பாடும், 4-வது செமஸ்டரில் தமிழ் வளர்ச்சியும், அறிவியல் வளர்ச்சியும் என்ற தலைப்பில் நடத்தப்பட இருக்கிறது. ஆங்கில மொழிப் பாடத்திலும் இதே போல் 4 செமஸ்டர்களுக்கு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. இதனைத்தான் அனைவரும் முழுமையாக நடத்த வேண்டும்.

25 சதவீதம் மாற்றி கொள்ளலாம்

இதற்கான தமிழ் பாடத்திட்டங்களை நிர்ணயிக்க 4 பேர் கொண்ட குழுவும், ஆங்கில பாடத்திட்டங்களை உருவாக்க தனிக்குழுவும் உருவாக்கப்பட உள்ளது. அந்த குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், இந்த ஆண்டில் இருந்தே தமிழ், ஆங்கில மொழி பாடத்திட்டங்கள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியாக நடத்தப்படும்.

மற்ற பாடத்திட்டங்களை பொறுத்தவரையில், உயர்கல்வி ஆணையம் அனுப்பியுள்ள பாடத்திட்டங்களில் அந்தந்த பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு தேவையான சில மாற்றங்களை செய்து கொள்ளலாம். அதாவது, 75 சதவீதம் உயர்கல்வி ஆணையம் அளித்த பாடத்திட்டங்களைதான் பின்பற்ற வேண்டும். 25 சதவீதம் தேவை ஏற்பட்டால் நீக்கிவிட்டு சேர்த்து கொள்ளலாம்.

நான் முதல்வன் திட்டம்

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டுகளில் என்ஜினீயரிங் படிப்புகளில் 6 ஆயிரத்து 986 பேராசிரியர்களுக்கு நான் முதல்வன் திட்டம் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் 3 லட்சத்து 5 ஆயிரத்து 784 மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்கள்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 22 பாடப்பிரிவுகளில் 7 ஆயிரத்து 835 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 8 லட்சத்து 55 ஆயிரத்து 785 மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள்.

அதை இந்த ஆண்டில் மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று துணைவேந்தர்களிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. அதற்கான பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது.

ஒரே மாதிரி தேர்வு, ஒரே நாளில் முடிவு

பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் வெவ்வேறு காலங்களில் தேர்வு நடந்து, தேர்வு முடிவும் வெவ்வேறு காலங்களில் வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கு இதனால் பட்டமேற்படிப்பில் சேருவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை உணர்ந்து, அனைத்து பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு தேர்வுகள், பள்ளியில் பொதுத்தேர்வுகள் எப்படி ஒரே மாதிரியாக நடத்தப்படுகிறதோ? அதேபோல், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பட்டப்படிப்பு தேர்வுகள் ஒரே மாதிரியாக நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகளும் ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டு உள்ளோம்.

அதுமட்டுமின்றி, பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையை அந்தந்த பல்கலைக்கழகங்கள் தனித்தனியே நடத்தி வந்தன. இனிமேல் பட்டப்படிப்பு தேர்வு முடிவு வந்ததும், தமிழக அளவில் எந்தெந்த பல்கலைக்கழகங்களில் பட்டமேற்படிப்பு இடங்கள் இருக்கின்றன? என்ற விவரங்களை வெளியிட்டு, அதற்கு ஒரே நேரத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இடங்கள் நிரப்பப்படும். இது அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். பல்கலைக்கழகங்களில் இருக்கும் ஆசிரியர் பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யும் பொருட்டு, காலி இடங்கள் நேர்காணல் நடத்தி நிரப்பப்படும்.

மாநில கல்வி கொள்கை

மாநில கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் நாங்கள் சரியாக இருக்கிறோம். வெகு விரைவில் அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில்தான் கல்வித்துறை செயல்படும். இதில் மாற்று கருத்து இல்லை. கவர்னர் தமிழ்நாடு அரசுடன் கலந்து பேசாமல் சிலவற்றை செய்து கொண்டு இருக்கிறார். அதனையும் அவரிடம் சொல்லி உள்ளோம்.

திராவிட மாடல் ஆட்சி நடக்கும் மண்ணில் அனைவருக்கும் கல்வி வழங்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அதற்கேற்றாற்போல் தான் மாநில கல்வி கொள்கை திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசுக்கும், எங்களுக்கும் கல்வி கொள்கையில் சண்டை இல்லை. அவர்கள் கொண்டு வந்திருக்கும் தேசிய கல்வி கொள்கையில் சிறந்ததை எடுத்து நடைமுறைப்படுத்துவோம். மாநில கல்வி கொள்கைக்கு சம்பந்தம் இல்லாத திட்டங்களை சேர்க்க மாட்டோம். தேசிய கல்வி கொள்கையை பின்பற்றாவிட்டால், மத்திய அரசு, மாநில அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்துவதும் தவறு.

உயர்கல்வி விழிப்புணர்வு

தமிழ் வழிக்கல்வியில் உயர்கல்வியை படிப்பதற்கான விழிப்புணர்வை பள்ளிகளில் இருந்தே மேற்கொள்ள விழிப்புணர்வு நடத்த உள்ளோம். தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றன. அதையும் எடுத்து சொல்வோம். இதன் மூலம் தமிழ் வழிக் கல்வி உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் சேருவார்கள் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments