ராமநாதபுரத்தில் ரெயில்வே மேம்பால சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தாமதம் பாதை அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி




ராமநாதபுரத்தில் ரெயில்வே மேம்பால சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தாமதமாகி வருவதாலும், பாதை அடைக்கப்பட்டுள்ளதாலும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகினர்.

பாலம் அமைக்கும் பணி

ராமநாதபுரம் ரெயில் நிலையம் அருகில் ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்க புதிய சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரெயில்வே சாலை மேம்பாலம் அமைக்க மொத்தம் ரூ.30.74 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 675.56 மீட்டர் நீளத்திலும், 11 மீட்டர் அகலத்திலும் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம் அமைக்கப்படவுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட பணிகள் 2 ஆண்டு காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களினால் தாமதமானது. பல போராட்டங்களுக்கு பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையின் பயனாக சாலையின் இருபுறங்களிலும் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. தடையாக இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் பாலம் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

போக்குவரத்து மாற்றம்

பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள பகுதியில் சாலையின் ஒருபுறம் உள்ள ஓரத்தில் பாலத்திற்கான தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மற்றொரு புறத்தில் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேம்பால தூண்களுடன் சாலை பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர, ரெயில்வே தண்டவாள பகுதியில் இருபுறமும் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் மேம்பால பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது. பாலம் அமைய உள்ள பகுதியில் காவிரி குடிநீர் குழாய்கள் செல்வதால் அதனை மாற்று இடத்தில் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பாலத்தின் மறு பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கின.

இந்த பணிகள் நடைபெறுவதால் மேற்கண்ட பகுதியில் இருபுறமும் வாகனங்கள் செல்லாமல் ராமநாதபுரத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் மட்டும் பாலம் பகுதி வழியாக செல்கின்றன. ராமநாதபுரம் நோக்கி வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும், அரண்மனை சாலை வழியாகவும் திருப்பி விடப்படுகின்றன.

பொதுமக்கள் அவதி

பாலம் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தாமதம் ஏற்பட்டு வருவதால் அதற்காக தோண்டப்பட்ட மணல் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சாலை மூடப்பட்டு இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் மறுபுறம் உள்ள ஒருவழிப் பாதையிலேயே செல்லவேண்டி உள்ளதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதுதவிர கிழக்கு கடற்கரை சாலையை சுற்றி வரும் வாகனங்களும் அரண்மனைசாலை சுற்றிவரும் வாகனங்களும் கேணிக்கரை நான்குமுனை சாலையில் சந்திப்பதால் அந்த பகுதியிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர். இதனை போக்கும் வகையில் பாலத்தின் தடுப்புசுவர் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் முன்பு போல் துரிதப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வுடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments