நாகப்பட்டினம் அருகே: பெண்கள் தலையில் மாட்டும் கிளிப்பை விழுங்கிய 3 வயது குழந்தை! 10 நிமிடங்களில் அகற்றிய மருத்துவர்கள்



 

நாகை மாவட்டம், கீழ் வேளூரில் மூன்று வயது குழந்தை விழுங்கிய இரும்பு கிளிப்பை குடலில் இருந்து மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
பெண்கள் தலையில் மாட்டும் இரும்பு கிளிப்பை மூன்று வயது குழந்தை விழுங்கியது. குழந்தையின் இரைப்பையில் சிக்கிய கிளிப்பை அறுவை சிகிச்சையின்றி பத்து நிமிடத்தில் மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ் வேளூர் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு சஞ்சனா என்கிற 3 வயதில் குழந்தை உள்ளது. தமிழரசன் கூலி வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, தான் அணிந்திருந்த ஹேர் கிளிப் ஒன்றை வாயில் வைத்து கடித்துக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஹேர் கிளிப்பை குழந்தை விழுங்கியுள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்தில் குழந்தை வாந்தி எடுத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து உடனடியாக வீட்டிற்கு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் எக்ஸ் ரே எடுக்குமாறு கூறியுள்ளார். எக்ஸ் ரே எடுத்து பார்த்தபோது இரைப்பையில் ஹேர் கிளிப் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து திருவாரூர் ஜவுளிக் காரத் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அங்குள்ள மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார். பெற்றோர்கள் அங்கு குழந்தையை அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்த தனியார் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் சுந்தர் என்பவர் குழந்தையை பரிசோதித்து விட்டு மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் ஸ்டாலின் உதவியுடன் அறுவை சிகிச்சையின்றி என்டோஸ் கோபி மூலம் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இன்றி குழந்தையின் இரைப்பையில் உள்ள ஹேர் கிளிப்பை பத்து நிமிடங்களில் அகற்றியுள்ளார்.


இது குறித்து மருத்துவர் சுந்தர் கூறுகையில், "குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.பேட்டரி மற்றும் கூர்மையான பொருட்களை குழந்தைகள் விழுங்கும்போது அது அவர்களது உயிருக்கு ஆபத்தாக அமையக்கூடும். எனவே குழந்தைகளை பெற்றோர்கள் அருகில் இருந்து கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்." என்று கூறினார்.குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளதாகவும் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments