வேங்கைவயல் வழக்கு: 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவு




வேங்கைவயல் வழக்கில் 4 சிறுவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி அளித்து புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.

வேங்கைவயல்

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரியை சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டன. தொடர்ந்து வேங்கைவயல் மற்றும் இறையூர் பகுதியை சேர்ந்தவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுமதி

இதற்கிடையில் வேங்கைவயலை சேர்ந்த ஒரு சிறுவன், இறையூரை சேர்ந்த 3 சிறுவர்கள் என 4 பேருக்கு டி.என்.ஏ. பாிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 5-ந் தேதி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின் போது கடந்த 14-ந் தேதி சிறுவர்கள் 4 பேரும், அவர்களது பெற்றோருடன் ஆஜராகினர். மேலும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு 4 சிறுவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணையை நீதிபதி ஜெயந்தி தள்ளி வைத்தார். இந்த நிலையில் நேற்று நீதிபதி ஜெயந்தி, 4 சிறுவர்களுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேல்முறையீடு?

இந்த உத்தரவில் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி, வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட போலீசாருடன் சேர்ந்து, 4 சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் கலந்து ஆலோசித்து டி.என்.ஏ. பரிசோதனையை எந்த தேதியில் நடத்தலாம் என முடிவு செய்து கொள்ள நீதிபதி அறிவுறுத்தினார்.

இதையடுத்து தேதி முடிவான பின்பு அன்றைய தினம் சிறுவர்கள் 4 பேரிடம் ரத்த மாதிரி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேகரிக்கப்படும். இதற்கிடையில் 4 சிறுவா்களில் வேங்கைவயல் பகுதியை சோ்ந்த சிறுவனுக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த தடை கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அச்சிறுவனது தரப்பில் ஆஜரான வக்கீல் மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவின் நகலை பெற்ற பின் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments