வேங்கைவயல் விவகாரத்தில் முன்னாள் நீதிபதி அறிக்கை ஜூலை 28-ம் தேதி தாக்கல்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்






வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தனது இடைக்கால அறிக்கையை கடந்த 28-ம் தேதி சமர்ப்பித்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் கடந்த 2022 டிச.26-ம் தேதி தெரியவந்தது. தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து முதலில் வெள்ளனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.



குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்ததற்கு சாட்சியாக யாரும் இல்லாததால், அறிவியல் பூர்வமான சோதனை அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, அந்த பகுதியை சேர்ந்த காவலர் ஒருவரிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், அந்த காவலர் மற்றும்4 சிறுவர்கள் உட்பட மொத்தம் 25 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக ரத்த மாதிரியை சேகரித்து சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதவிர, மேலும் பலரை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த இருப்பதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.


இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜரானார். அவர் கூறியபோது, ‘‘வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக முன்னாள் நீதிபதி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அரசுக்கு கடந்த ஜூலை 28-ம் தேதி தாக்கல் செய்துள்ளது. அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை வரும் செப்.14-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments