புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் வட்டம், பூங்குடி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து: உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு




வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வெடிவிபத்து

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் வட்டம், பூங்குடி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த மாதம் (ஜூலை) 30-ந்தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த 5 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அந்த 5 பேரில் கோவில்பட்டியை சேர்ந்த வீரமுத்து (வயது 31), திருமலை (30), வெள்ளனூரைச் சேர்ந்த சுரேஷ் (35) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு வேதனை அடைந்தேன்.

ரூ.3 லட்சம் நிதியுதவி

இந்த விபத்தில் படுகாயம் அடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைரமணி, குமார் ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி இருக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு தலா ரூ.2 லட்சமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments