சுதந்திர தின விழா தொடர் விடுமுறையையொட்டி ஆக.11,12-ல் 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்




தொடர் விடுமுறையையொட்டி 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்த வார இறுதி நாளான இரண்டாம் சனிக்கிழமை (ஆக.12) மற்றும் ஞாயிற்றுக்கிழமையை (ஆக.13) தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு (ஆக.15) செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை வருகிறது.

நான்கு நாட்கள் விடுமுறை: இதனால் அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திங்கள்கிழமை (ஆக.14) ஒரு நாள் விடுப்பு எடுக்கும் பட்சத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் சூழல் உள்ளது. எனவே, பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் மற்றும் ஆடி மாதம் கோயில் திருவிழாக்களுக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. இதைக்கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


அதன்படி, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு ஆக.11-ம் தேதிதினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 500 பேருந்துகளும், ஆக.12-ம் தேதி, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து 200 பேருந்துகளும், பெங்களூருவில் இருந்து முக்கிய இடங்களுக்கு 400 பேருந்துகளும் என மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதுமட்டுமின்றி, ஆக.15-ம்தேதி சொந்த ஊர்களில் இருந்துசென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்துநிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயணிகள் முன்பதிவு: சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து ஆக.11-ம் தேதி பயணம் மேற்கொள்ள 18,199 பயணிகளும், ஆக.12-ல் பயணம் செய்ய 6,949 பயணிகளும் மற்றும் ஆக.13-ல் பயணிக்க 4,514 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். ஆக.15-ம் தேதி பல்வேறு இடங்களில் இருந்து பயணிக்க இதுவரை 12,257 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு தங்களது பயணத்துக்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments