திருவண்ணாமலை அருகே ஹிஜாப் அணிந்து வந்த இளம்பெண்ணுக்கு இந்தி தேர்வு எழுத அனுமதி மறுப்பு தேர்வு மையத்தை முஸ்லிம் லீக் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு




திருவண்ணாமலை அருகே ஹிஜாப் அணிந்து வந்த இளம்பெண்ணுக்கு இந்தி தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தேர்வு மையத்தை முஸ்லிம் லீக் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தி தேர்வுகள்

தமிழ்நாடு தட்சிண பாரத இந்தி பிரசார சபா சார்பில் 6 மாதத்திற்கு ஒருமுறை இந்தி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலையை அடுத்த சோமாசிப்பாடி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று இந்தி தேர்வு நடைபெற்றது.

காலை 10 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரையும் தேர்வு நேரம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தேர்வில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அரபி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இளம்பெண் வந்தார்.

வாக்குவாதம்

அனுமதி கடிதத்துடன் தேர்வு அறைக்குள் சென்று அவர் அமர்ந்தார். அவருக்கு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது. 10 நிமிடங்கள் தேர்வு எழுதி கொண்டிருந்த போது தேர்வறை கண்காணிப்பாளர் அங்கு வந்தார். அவர், ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வை எழுதக்கூடாது என கூறியதாக தெரிகிறது.

இதனை சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் ஹிஜாப் அணிந்து கொண்டுதான் தேர்வை எழுதுவேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தேர்வறையின் உள்ளேயே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் இளம்பெண்ணிடம் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கூடாது, இல்லையென்றால் வெளியே சென்று விடுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெளியே வந்த அந்த பெண்ணை தேர்வறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

பள்ளி முற்றுகை

இது குறித்து தகவலறிந்த எஸ்.டி.பி.ஐ. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருவண்ணாமலை் கீழ்பென்னாத்தூர் போலீசார் விரைந்து வந்து தேர்வு எழுத வந்த இளம்பெண்ணிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அந்த இளம்பெண்ணிடம் தேர்வு எழுத மதியம் நேரம் ஒதுக்கி தருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தேர்வு எழுதாமல் சென்று விட்டார்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments