சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்க இருப்பதையொட்டி சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரயில் சேவையில்... 7 மாதங்களுக்கு திடீர் மாற்றம்






சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்க இருப்பதையொட்டி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பறக்கும் ரயில் சேவை 1997ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கடற்கரை முதல் மயிலாப்பூர் வரை முதலாவதாக இந்த சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. எம்ஜிஆர் காலத்தில் திட்டமிடப்பட்ட பறக்கும் ரயில் சேவை, கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்டது.

சென்னை பறக்கும் ரயில் சேவை

இதனையடுத்து, பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. தற்போது, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நாள்தோறும் 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான சென்னைவாசிகள் பறக்கும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவையை நீட்டிப்பதற்காக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதேபோல், சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட இருக்கிறது. இதனையொட்டி, சென்னை பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படும் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது..

பறக்கும் ரயில் சேவை ரத்து

இந்த நிலையில், சென்னை கடற்கரை முதல் சிந்தாரிப்பேட்டை வரை 7 மாதங்களுக்கு பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. அதாவது. 3.53 கிலோ மீட்டர் இடையேயான பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்த வழித்தடத்தில் வருகிற 26ஆம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதன் பிறகு 7 மாதங்களுக்கு பறக்கும் ரயில் சேவை இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - எழும்பூர் இடையேயான புதிய வழித்தடம் சுமார் 280 கோடி ரூபாய் மதிப்பில் அமைகிறது. இதனை கருத்தில் கொண்டு பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவுபெற்ற பிறகு பறக்கும் ரயில் சேவை மீண்டும் பழையபடி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வேளச்சேரி - பரங்கிமலை வரையிலான பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு ரயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் விஸ்வநாத் ஈர்யா கோட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறியதாவது :

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4 கி.மீ தொலைவிற்கு நான்காவது வழிதட
விரிவாக்கம் பணி ரூ.279 கோடி மதிப்பில் 7 மாத காலம் நடைபெற உள்ளது. இதன்
காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் செல்லும் ரயில்கள்
அனைத்தும் வரும் 27 ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டை நிலையத்தில் இருந்து
வேளச்சேரிக்கு இயக்கப்படும்.

தற்போது தினமும் 122 ரயில்கள் சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதன் எண்ணிக்கை 80 ரயில்களாக குறைக்கப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்

தினமும் 48 புறநகர் ரயில்கள் ஆவடி- சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில்
இயக்கப்படுகிறது மற்றும் கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை- வேளச்சேரி
வழிதடத்தில் 11 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதன் சேவை இனி வரும் 27 ஆம் தேதி
முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையதுடன் நிறுத்தப்படும்.

எழும்பூரில் இருந்து அல்லது மற்ற ரயில் நிலையங்களில் இருந்து வேளச்சேரி
வழித்தடத்தை இணைப்பதற்கு கூடுதல் மாநகர பேருந்து சேவை தேவைப்படும் பட்சத்தில்
வேண்டிய வழித்தடத்தில் கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து
கழகத்திற்கு தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் கோரிக்கை வைக்கப்படும்.

சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கடற்கரை – வேளச்சேரி வழிதடமான MRTS என்னும் பறக்கும் ரயில் தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கொடுக்கும் திட்டம் இதுவரை உறுதியாகவில்லை. சென்னையில் ஒரே டிக்கெட்டில் அனைத்து பொது போக்குவரத்தையும் பயன்படுத்தும் திட்டம் தொடர்ந்து ஆய்வில் உள்ளது. இது தொடர்பாக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் தொடர் ஆய்வுகளை செய்து வருகிறது.

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடர்பான வரைபடம்
தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முழுவதும் CMDA
நிதியில் செயல்படுத்தப்பட உள்ளது” என தெரிவித்தார்.

சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே இயக்கப்படும் ரயில்களின் திருத்தப்பட்ட கால அட்டவணையை ரயில்வே வெளியிட்டுள்ளது











முக்கிய_குறிப்பு

கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே ஆகஸ்டு 27 முதல் ரயில் சேவைகள் ரத்து

சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே மட்டுமே ரயில்கள் இயங்கும்

வேளச்சேரியில் இருந்து இருந்து தொலைதூரங்களுக்கு செல்லும் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி , ஆவடி உள்ளிட்ட அனைத்து ரயில்களும் முழுவதுமாக ரத்து

7 மாதங்களுக்கு இந்த ரத்து அமலில் இருக்கும்

25 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் (peak hours உட்பட)

காலை 5 மணிக்கு வேளச்சேரியில் இருந்தும், காலை 5.40 க்கு சிந்தாதிரிப்பேட்டையில் இருந்தும் முதல் சேவை இயங்கும்.

கடைசி ரயில் வேளச்சேரியில் இருந்து இரவு 10.15க்கும், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இரவு 10.55 க்கும் புறப்படும்.

PC Credit: Ravannan 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments