அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை




அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேகத்தடை

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியான கல்லூரி முக்கம் பகுதிகளில் கல்லூரி, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நேரத்தில் பள்ளியைவிட்டு வெளியே வரும் மாணவ- மாணவிகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க கிழக்கு கடற்கரைச் சாலையில் கல்லூரி முக்கம் பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

மாணவ- மாணவிகள் நலனை கருத்தில்கொண்டு இந்த வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தாலும், இந்த வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் இதன்மீது வெள்ளை வர்ண பூச்சு பூசப்படவில்லை.

வெள்ளை வர்ணம்

இந்நிலையில் அந்த வேகத்தடையில் அப்பகுதியில் வசிக்கும் சில இளைஞர்கள் வெள்ளை வர்ணம் பூசினர். ஆனால் தற்போது வெள்ளை வர்ணம் அழிந்துவிட்ட நிலையில் புதிதாக இச்சாலை வழியாக பயணிப்பவர்கள் மட்டுமின்றி தினசரி இச்சாலை வழியாகச் செல்பவர்களும் வேகத்தடை இருப்பது தெரியாமல் சிறு, சிறு விபத்துகளில் சிக்குகிறார்கள். எனவே விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடையின் மீது வெள்ளை வர்ணம் பூசவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

News Credit : Daily Thanthi

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments