கடல் வளத்தைப் பெருக்க கோட்டைப்பட்டினம் கடலில் லட்சக்கணக்கான இறால் குஞ்சுகள் விடுவிப்பு!






ராமநாதபுரம்/புதுக்கோட்டை: கடல் வளத்தை அதிகரிக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் (CMFRI) சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் லட்சக்கணக்கான இறால் குஞ்சுகள் விடப்பட்டன.

மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் பணிகள் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது 'மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம்'. இங்குள்ள விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், கடல் வளத்தைப் பெருக்கவும் மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மீன், நண்டு மற்றும் இறால் குஞ்சுகளைப் பொரிப்பகங்களில் செயற்கையாக உருவாக்கி, அவற்றைக் கடலில் விடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், கடலில் கூண்டு அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கும் தரமான மீன் குஞ்சுகளை வழங்கி இந்த ஆராய்ச்சி நிலையம் ஆதரவளித்து வருகிறது.

புதுக்கோட்டையில் கடல்வள மேம்பாடு புதுக்கோட்டை மாவட்டம் சுமார் 42 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைப் பகுதியைக் கொண்டுள்ளது. பாக் ஜலசந்தி கடல் பகுதியை உள்ளடக்கிய இங்கு, நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் அதிக அளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டக் கடல் பகுதியில் மீன் வளத்தை அதிகரிக்கும் நோக்கில் மத்திய மீன்வள ஆராய்ச்சி நிலையம் முக்கிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தது. அதன்படி, கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் விடுவதற்காக லட்சக்கணக்கான இறால் குஞ்சுகள் பிரத்யேகமாகத் தண்ணீர் நிரப்பப்பட்ட கேன்களில் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டன. பின்னர், அவை படகுகள் மூலம் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன.

விஞ்ஞானியின் விளக்கம் இந்த முன்னெடுப்பு குறித்து மண்டபம் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி வினோத் கூறுகையில், "கடலில் விடப்பட்டுள்ள இந்த இறால் குஞ்சுகள் பவளப்பாறைகள் மற்றும் கடல் தாழைகள் (கடற்புற்கள்) உள்ளிட்டவற்றில் தஞ்சம் அடைந்து வேகமாக வளர்ந்து பெருகும். மண்டபம் ஆராய்ச்சி நிலையத்தில் மீன் மற்றும் இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்கென பிரத்யேக வசதிகள் உள்ளன. கடலின் எந்தப் பகுதியில் மீன் வளம் குறைவாகக் காணப்படுகிறதோ, அந்தப் பகுதியைக் கண்டறிந்து அங்கு இதுபோன்று குஞ்சுகள் விடப்படுகின்றன" என்று தெரிவித்தார்.

 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments