காரைக்குடி - திருவாரூர் இடையே வேகம் அதிகரிப்பு பட்டுக்கோட்டை அறந்தாங்கி வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை ரெயிலின் பயண நேரம் குறைக்கப்படுமா? தினசரி இயக்கவும் பயணிகள் வலியுறுத்தல்




காரைக்குடி - திருவாரூர் இடையே ரெயில் வேகம் அதிகரிக்கப்பட்டது. இதையொட்டி தாம்பரம் - செங்கோட்டை ரெயிலின் பயண நேரம் குறைத்து, தினசரி இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

வாரம் 3 நாட்கள்

செங்கோட்டையில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை, நெல்லை சந்திப்பு, அருப்புக்கோட்டை, பட்டுக்கோட்டை, வழியாக தாம்பரம் செல்லும் செங்கோட்டை - தாம்பரம் ரெயில் வாரம் மும்முறை இயக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி இந்த சேவை தாம்பரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்தும் வாரம் மும்முறை ரெயிலாக இந்த அதிவிரைவு ரெயில் இயங்கி வருகிறது.

தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 20683) தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு நெல்லைக்கு வந்து, 10.50 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது.

செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 20684) செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு நெல்லை வந்து 5.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

இரு மார்க்கங்களிலும் 764 கிலோ மீட்டர் தூரத்தை 13 மணி 50 நிமிடங்களில், அதாவது 55 கிலோ மீட்டர் சராசரி வேகத்துடன் பயணிக்கிறது.

பயண நேரம் குறைக்கப்படுமா?

இந்த வழித்தடத்தில் தாம்பரம் - விழுப்புரம் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில், விழுப்புரம் - மயிலாடுதுறை - திருவாரூர் 100, திருவாரூர் - காரைக்குடி 75, காரைக்குடி - மானாமதுரை 100, மானாமதுரை - விருதுநகர் 80,

விருதுநகர் - நெல்லை - தென்காசி 110, தென்காசி - செங்கோட்டை 60 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்படு வருகிறது.

இதில் தற்போது திருவாரூர் - காரைக்குடி இடையே அதிகபட்ச வேகம் 70 கிலோ மீட்டரில் இருந்து 110 ஆக உயர்த்துவதற்கு சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் தாம்பரம் - செங்கோட்டை ரெயிலின் வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே எழுந்துள்ளது.

பயணிகள் வலியுறுத்தல்

இதுகுறித்து ரெயில்வே பயணிகள் கூறியதாவது:-

தற்போது காரைக்குடி - திருவாரூர் இடையே 70 கிலோ மீட்டரில் இருந்து 110 ஆக ரெயிலின் வேகம் அதிகப்படுத்தப்பட இருப்பதால் பயண நேரம் 30 நிமிடங்கள் நேரம் வரை குறைய வாய்ப்புள்ளது. மேலும் விருதுநகர் - மானாமதுரை இடையே வேகத்தை 110 கிலோ மீட்டர் ஆக மாற்ற வேண்டும். மின்சார என்ஜின் மூலம் செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரை இயக்கினால் மேலும் 30 நிமிடங்கள் நேரம் குறையும்.

தென்காசி - நெல்லை ரெயில் வழித்தட மக்களின் நலன் கருதி செங்கோட்டையில் இருந்து புறப்படும் நேரத்தை மாலை 4.15 மணிக்கு பதிலாக மாலை 5.15 மணிக்கு புறப்படும் வகையில் அட்டவணையை மாற்றி, 13 மணி 50 நிமிடங்களாக உள்ள பயண நேரத்தை 12 மணி 50 நிமிடங்களாக குறைக்க வேண்டும். தாம்பரத்தில் இருந்து வரும்போது காலை 8 மணிக்கு முன்பாக செங்கோட்டையை வந்தடையும் வகையில் அட்டவணையை மாற்றி ரெயிலின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். மேலும் தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரெயிலை பயணிகளின் நலன் கருதி தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.

இவ்வாறு பயணிகள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments