வங்கக்கடலில் நாளை வலுவடைகிறது ‘மிக்ஜம்' புயல் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ந்தேதி கரையை கடக்க வாய்ப்பு




வங்கக்கடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ‘மிக்ஜம்’ புயல் வலுவடைகிறது என்றும், இது நெல்லூர்-மசூலிப்பட்டினத்துக்கும் இடையே 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை கரையை கடக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

‘மிக்ஜம்’ புயல்

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே-தென் கிழக்கே சுமார் 740 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு சுமார் 860 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென் கிழக்கே சுமார் 910 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (சனிக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். அதனையடுத்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) புயலாக வலு பெறுகிறது. புயல் உருவாகும் பட்சத்தில், அந்த புயலுக்கு ‘மிக்ஜம்' என்று பெயரிடப்பட உள்ளது. இந்த பெயரை மியான்மர் நாடு பரிந்துரைத்து இருக்கிறது.

5-ந்தேதி கரையை கடக்கும்

புயலாக வலுவடைந்த பின்னர், வடமேற்கு திசையில் நகரத் தொடங்கி, தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோர பகுதிகளில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) நெருங்கும். அதனையடுத்து தெற்கு ஆந்திர கடலோர பகுதிக்கு இணையாக வடக்கு நோக்கி நகர்ந்து, 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே சுமார் 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் சூறாவளி புயலாக கரையை கடக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புயலின் மையப் பகுதியான கண் பகுதி, எந்த இடத்தில் கடக்கும் என்பது இதுவரை கணிக்கப்படவில்லை.

3 நாட்களுக்கு மழை

இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்து வரும் 3 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

கனமழையை பொறுத்தவரையில், இன்று டெல்டா மாவட்டங்களிலும், நாளை மற்றும் நாளை மறுதினம் வட கடலோர மாவட்டங்களிலும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழை

அதன்படி, தமிழ்நாட்டில் இன்று (சனிக்கிழமை) அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.


‘ரெட் அலர்ட்’

நாளை மறுதினம் தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். இதுதவிர கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிகனமழை பெய்யக் கூடிய திருவள்ளூர் மாவட்டத்துக்கு வருகிற 4-ந்தேதி சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலெர்ட்) நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இங்கு ஓரிரு இடங்களில் 20 செ.மீ.க்கு மேல் அதிகனமழை பெய்யக்கூடும்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், ‘அம்பத்தூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, காட்டுமன்னார் கோவில், கொடுமுடி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், மலர் காலனி, கொளத்தூர், கோடம்பாக்கம், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம், மயிலாடுதுறை, வடசென்னை, தேனாம்பேட்டை, திருக்குவளை, திருப்பூண்டி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ.,

மாமல்லபுரம், வாடிப்பட்டி, சென்னை பெருங்குடி, அண்ணாநகர், பெரம்பூர், மவுலிவாக்கம், ஆலந்தூர், தாம்பரம் எம்.ஜி.ஆர்.நகர், திரு.வி.க.நகர், ஆவடி பகுதிகளில் 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments