5 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற நிலையில் புதுக்கோட்டை, ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையினர் அட்டூழியம்




5 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற நிலையில் புதுக்கோட்டை, ராமேசுவரம் மீனவர்கள்16 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சிறைபிடித்தனர்.

‘மிக்ஜம்’ புயல்

வங்கக்கடலில் உருவாகியிருந்த ‘மிக்ஜம்’ புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. புயல் கரையை கடந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து சுமார் 180 விசைப்படகுகளிலும், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து 70 விசைப்படகுகளிலும் மீனவர்கள் கடலுக்கு நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்றனர்.

இதில் கோட்டைப்பட்டினம் , ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரில்வான் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த அபு மன்சூர் (வயது 48), இப்ராஹிம் (45), அகமது (38), கணேசன் (58) ஆகியோரும், டிக்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் முனியசாமி (40), செந்தூரப்பாண்டி (24), அருள் (33), தன்ராஜ் (55) ஆகியோரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் சிறைபிடித்தனர். மேலும் அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

16 மீனவர்கள் கைது

இதேபோல் ராமேசுவரத்தில் இருந்து 445 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இதில் உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜெயஸ்தன், தல்சா, சார்லஸ், கெபிஸ்டன், தினேஷ், முனியசாமி, அருள்பிரிஸ்ட்டன், ஜான் சைமன் ஆகிய 8 மீனவர்கள் மீன்பிடிக்க சென்று இருந்தனர். அப்போது அங்கு 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த 8 மீனவர்களையும் கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். காங்கேசன் ராணுவ முகாமில் 16 மீனவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 16 விசைப்படகு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடனே விடுவிக்க வேண்டும்

இதுகுறித்து கோட்டைப்பட்டினம் மீனவ சங்க தலைவர் ஹசன் முகைதீன் கூறுகையில், ‘இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. புயல் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடந்த 5 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது. இந்தநிலையில் தற்போது தான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.மீன்பிடிக்கச் சென்ற முதல் நாளே இலங்கை கடற்படையினர் 16 மீனவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரிய செயலாகும். எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments