அறந்தாங்கியில் ஏ.டி.எம். கார்டு மூலம் நூதன திருட்டு; 2 பேர் கைது




அறந்தாங்கியில் ஏ.டி.எம். கார்டு மூலம் நூதன முறையில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கார்டை மாற்றி...

அறந்தாங்கி தாலுகா கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அறந்தாங்கி பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் சக்திவேல் தனது கார்டை கொடுத்து பணத்தை எடுத்து தருமாறு கூறியுள்ளார். பின்னர் அவரது கார்டை வாங்கி கொண்டு வேறொரு கார்டை மாற்றி கொடுத்து விட்டு பணம் வரவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் சக்திவேல் கார்டை போட்டு பார்த்த போது, கார்டு மாறுதலாக இருந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

இதுகுறித்து அவர் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஆவுடையார்கோவிலில் உள்ள ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.98 ஆயிரத்தை திருடி செல்வது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து அவர்களை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் வேலூர் மாவட்டம் கொணவட்டம் யாசின் சஷேப்தெருவை சேர்ந்த ஜியாவுதீன் மகன் முதல்சீர் (வயது38), திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் அபேல் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 20-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் அறந்தாங்கி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments