அறந்தாங்கி அருகே கோவிலில் திருடிவிட்டு கேமரா முன்பு நையாண்டி செய்த திருடனை 24 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்




புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் கோயிலின் உண்டியலை உடைத்து திருடியதோடு, சிசிடிவி கேமராவின் முன் போஸ் கொடுத்த திருடர்களை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த போலீசார்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள், கோயில் உண்டியலை உடைத்து திருடியதோடு, கேமராவின் முன்பாக முகத்தை காட்டி போஸ்கொடுத்தனர். மேலும், சிசிடிவி கேமராவையும் உடைத்துவிட்டு உண்டியல் பணத்துடன் தப்பி ஓடினர். அப்போது அவர்களை பிடிக்க துரத்தி சென்றவர்களிடம், அரிவாளை காட்டி மிரட்டவும் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பள்ளி மாணவர், 17 வயதுடைய இரண்டு சிறார்கள், முத்து (19) என்ற இளைஞர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பரவக்கோட்டை எனும் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


மேலும் திருட்டிற்கு தொடர்புடைய மற்றும் திருடர்கள் பயன்படுத்திய பல்சர் பைக், ஒரு செல்போன், 4100 ரூபாய் ரொக்கப்பணம், கட்டிங்க் ப்ளேடு உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட ஆசை என்கிற நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், துரிதமாக செயல்பட்ட போலீசார் 24 மணி நேரத்திற்குள்ளாக திருடர்களை கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதனிடையே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 நபர்களில், மூன்று பேர் சிறாராக இருப்பது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments