இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளியுறவுத்துறை மந்திரிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்




இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையினரால் கடந்த 13-ந்தேதி 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள், எந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களை மீன் பிடிப்படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது சம்பவம்.

நடவடிக்கை

இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இதுபோன்று கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மேலும் இது மீனவர்களின் வாழ்வில் பெருத்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்துகிறது.

இந்த 6 மீனவர்கள் மற்றும் அவர்கள் சென்ற படகுகளை தவிர்த்து, ஏற்கனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கை வசம் இருக்கிறது. எனவே, தாங்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 45 மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments