திருவாடானை ஊராட்சியை விரைவில் பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் பஞ்சாயத்து தலைவர் இலக்கியா ராமு கோரிக்கை




திருவாடானை ஊராட்சியை விரைவில் பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பஞ்சாயத்து தலைவர் இலக்கியா ராமு கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவாடானை

திருவாடானை பஞ்சாயத்து தலைவரானஇலக்கியா ராமு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றி வருகிறார். தனது மக்கள் பணி குறித்து அவர் கூறியதாவது:-

திருவாடானை ஊராட்சி தாலுகா மற்றும் தொகுதியின் தலைமையிடமாக விளங்கி வருகிறது. வட்ட அளவிலான அனைத்து அரசு அலுவலகங்களும் திருவாடானையில் செயல்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் புதிய குடியிருப்புகள் உருவாகி மக்கள் தொகை அதிகரித்து வருவதால் அரசும் மாவட்ட நிர்வாகமும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து சாலை, குடிநீர், கழிவுநீர், கால்வாய்கள், தெருவிளக்குகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரூராட்சியாக..

தற்போது தமிழக அரசு திருவாடானை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இது வரவேற்கத்தக்கது. விரைவில் திருவாடானை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்திட தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவாடானை வர்ண தீர்த்த தெப்பக்குளத்தை சுற்றிலும் வடக்கு, மேற்கு, தெற்கு பகுதிகளில் பேவர் பிளாக் தளம் அமைக்க வேண்டும். திருவாடானை கண்மாயை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி மடைகள் மற்றும் கழுங்குகளை சீரமைக்கவும், ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் தீர்த்த குளங்களை தூர்வாரி சீரமைக்கவும் வேண்டும்.

கூடுதல் டாக்டர்கள்

திருவாடானை அரசு தாலுகா மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் நியமிக்க வேண்டும். திருவாடானையில் உள்ள அம்மா பூங்கா, தியாகிகள் நினைவு பூங்கா, சமத்துவபுரம் பசுமை பூங்காவை சீரமைத்து விளையாட்டு உபகரணங்கள் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். திருவாடானையில் தியாகிகள் நினைவு மண்டபம் கட்ட வேண்டும்.

திருவாடானை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு குடிநீர் வசதி, கழிப்பறை மற்றும் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும். திருவாடானையை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும். அரசு தொழிற்பயிற்சி கல்லூரி மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments