மாவட்டத்தில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் 114 கொள்முதல் நிலையங்கள் திறப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விட்டது. 114 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

சம்பா நெல் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவ மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. கிணற்றுப்பாசனம், ஆழ்குழாய் கிணறு, ஏரி, குளங்கள் மூலமாக பாசன வசதிகளில் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 401 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

சம்பா பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. ஒரு சில வயல்களில் தற்போது அறுவடையை தொடங்கி விட்டனர். பெரும்பாலும் தை மாதத்தில் அறுவடை நடைபெறுவது வழக்கம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உழவர் திருநாளில் அறுவடை நெற்கதிர்களை வைத்து விவசாயிகள் வழிபாடு நடத்துவது உண்டு. மேலும் கதிர் அடித்தலும் நெல் மணிகளை எடுத்து வைப்பார்கள்.

கொள்முதல் நிலையங்கள்

இந்த நிலையில் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை தொடங்குகிற நிலையில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய வழக்கம் போல திட்டமிட்டுள்ளது. இதற்காக 114 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஊழியர்களும் நியமிக்கப்பட்டு விட்டனர். பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்ததும் நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கும்.

விவசாயிகளும் பண்டிகையை முடித்த பின்னர் தான் முழுவதுமாக அறுவடையை தொடங்குவார்கள். அதன்பின் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பார்கள். நெல் அறுவடை தொடங்குவதையொட்டி தனியார் நெல் அறுவடை எந்திரங்களும் புதுக்கோட்டைக்கு வரத்தொடங்கி உள்ளன. விவசாயிகளும் எந்திரங்களுக்கு முன்பதிவு செய்து வருகின்றனர். ஒரு சில வயல்களில் கூலித்தொழிலாளர்கள் மூலம் அறுவடை மேற்கொள்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments