தனுஷ்கோடி அருகே அகதிகளாக வந்து நடுக்கடல் மணல் திட்டில் 3 குழந்தைகளுடன் தவித்த தம்பதி போலீசார் மீட்டனர்




அகதிகளாக வந்து நடுக்கடலில் உள்ள மணல் திட்டில் 3 குழந்தைகளுடன் தவித்த தம்பதியை போலீசார் மீட்டனர்.

மணல் திட்டில் தவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள மணல் திட்டில் இலங்கை அகதிகள் சிலர் தவிப்பதாக மீனவர்கள் மூலம் கடலோர போலீசாருக்கு தகவல் வந்தது.

ராமேசுவரம் கடலோர போலீசார் மற்றும் தனிப்பிரிவு, கியூ பிரிவு போலீசார் தனுஷ்கோடி கடற்கரையில் இருந்து மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகு ஒன்றில் 1-வது மணல் திட்டுக்கு சென்றனர். அங்கு தீவில் 3 குழந்தைகளுடன் தம்பதி தவித்து கொண்டிருந்தனர்.

பின்னர் அவர்கள் 5 பேரையும் படகில் ஏற்றி தனுஷ்கோடி கடற்கரை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் மண்டபம் கடலோர போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டனர். தீவிர விசாரணை நடந்தது.

விசாரணையில் இலங்கை வவுனியா பகுதியை சேர்ந்த நந்தகுமார் (வயது42), அவருடைய மனைவி சங்கரி (26), இவர்களது குழந்தைகள் ஜெர்சிகா, ஜெபிசிகா, அனுஷ்கா ஆகியோர் என்று தெரியவந்தது.

இலங்கை மன்னார் மாவட்டம் தாழ்வுப்பாடு கடற்கரையில் இருந்து படகோட்டிக்கு இலங்கை பணம் ரூ.13 ஆயிரம் கொடுத்து அங்கிருந்து படகில் தப்பி அகதிகளாக வந்து, நடுக்கடலில் உள்ள 4-வது மணல் திட்டில் இறங்கி உள்ளனர். பின்னர் படகோட்டிகள் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அன்று இரவு முழுவதும் அவர்களை யாரும் மீட்க வரவில்லை. நேற்று முன்தினம் இரவு மீண்டும் இலங்கையில் இருந்து வந்த படகில் ஏறியுள்ளனர். இதையடுத்து 1-வது மணல் திட்டில் அவர்களை இறக்கிவிட்டு படகோட்டிகள் சென்றுவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

காரணம் என்ன?

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தொடர்ந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து இருப்பதாலும், வேலை வாய்ப்பு இல்லாததாலும் தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக நந்தகுமார், சங்கரி ஆகியோர் கூறினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments