மேலூர்-காரைக்குடி 4 வழிச்சாலைக்காக வழங்கிய அனுமதியை பயன்படுத்தி சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய விவகாரத்தில் கடும் நடவடிக்கை மதுரை கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு




4 வழிச்சாலை பணிகளுக்கு மண் அள்ள வழங்கிய அனுமதியை பயன்படுத்தி சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கிராவல் மண் குவாரி

மதுரை மாவட்டத்தை சேர்ந்த சேவுகன், பாரதிராஜா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மேலூர் தாலுகா மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள பழையனேந்தல் கண்மாய், செட்டிகுளம் கிராமத்திற்கு உட்பட்ட கள்ளத்தி கண்மாய் ஆகிய நீர்நிலை பகுதிகளிலும், கொட்டகுடி கிராமத்துக்கு உட்பட்ட நிலங்களிலும் சட்டவிரோதமாக குவாரி அமைக்கப்பட்டு மண் அள்ளப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்கு செல்லும். சுற்றுப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இப்பகுதிகளில் குவாரி அமைத்து மண் அள்ள தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கை கடந்த அக்டோபர் மாதம் விசாரித்து, குவாரி நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து இருந்தோம். கனிமவளத்துறை அதிகாரிகள் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு இருந்தோம்.

சட்டவிரோதமாக அள்ளினர்

அதன்பேரில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் தாக்கல் செய்த அறிக்கையில், கொட்டகுடி பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 38,858 கியூபிக் கன மீட்டர் அளவுக்கு கிராவல் மண் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் மேலூர்-காரைக்குடி நான்கு வழிச்சாலைக்காக கிராவல் மண் எடுக்க குவாரிக்கு வழங்கிய உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டரின் அறிக்கையின் மூலம் மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்துள்ளது. மேலும் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இது எப்படி நடக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் பொறுப்பில் இருந்து அதிகாரிகள் தப்ப முடியாது.

கடும் நடவடிக்கை

மேலே குறிப்பிட்டுள்ள செயல்கள், எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட வேண்டிய குற்றமாகும். இதுதொடர்பாக மதுரை மாவட்ட கலெக்டர் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments