தஞ்சை-புதுக்கோட்டை இடையே ரூ.90 கோடியில் கடற்பசு பாதுகாப்பு மையம் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி தகவல்




தஞ்சை-புதுக்கோட்டை இடையே ரூ.90 கோடியில் கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கப்படுகிறது என்று மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி கூறினார்.

கருத்தரங்கம்

தஞ்சை மாவட்ட வனத்துறை சார்பில் கடற்பசு பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் தஞ்சையில் நேற்று நடந்தது. கருத்தரங்கை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

150 கடற்பசுக்கள்

உலகிலேயே மிகவும் அரிதான கடல்வாழ் பாலூட்டி வகையினை சேர்ந்த உயிரினம் கடற்பசு. அபூர்வமான இந்த கடற்பசு தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டினம் அருகே மனோரா பகுதியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தையொட்டியுள்ள கடலோர பகுதியான அம்மாப்பட்டினம் வரை காணப்படுகிறது.

இந்த பகுதியில் 150 எண்ணிக்கையிலான கடற்பசுக்கள் காணப்படுகிறது.

ரூ.90 கோடியில் பாதுகாப்பு மையம்

இதனை ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டு மத்திய, மாநில அரசுகள் இந்த பகுதியினை உலகின் முதல் கடற்பசு காப்பகமாக அறிவித்துள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.90 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தனித்துவமிக்க உயிரினமான இந்த கடற்பசு வாழ்வதற்கு ஏற்புடைய சூழல் இங்கு அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. ஆழம் குறைவான கடற்பகுதி, அலைகள் மிதமான கடலோரப்பகுதி, தூய்மை மிகு கடற்பகுதி மற்றும் இந்த கடற்பசுக்கு உகந்த கடற்தாழை எனும் அரிய புல்வகை காணப்படுகிற பகுதியாக உள்ளது.

ஆபத்து

அதேபோல் இந்த பகுதியில் கடற்பசு இனப்பெருக்கம் செய்யவும், குட்டி போட்டு பாலூட்டுவதற்கும், இரையினை உட்கொள்ளவும் தனது இனத்தை தக்கவைத்துக் கொள்ளும் பருவ சூழ்நிலையும் அமைந்துள்ளது. உலகில் அழிந்து வரும் இந்த கடற்பசு இனம் நம் கடலோரப் பகுதியில் அதிகமாக வசிக்கிறது. மீனவர்களின் வலைகளி்ல் சிக்கியும், படகுகளில் மோதியும், பிளாஸ்டிக், கண்ணாடி பொருட்களால் இந்த கடற்பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. மீனவர்களின் வலையில் சிக்கிய 3 கடற்பசுக்கள் இதுவரை பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளது. இது தொடர்பான மீனவர்களுக்கு ரூ.1½ லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த இனத்தை பாதுகாக்கவும், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழிப்புணர்வு கையேடு

தொடர்ந்து கருத்தரங்கில் கடற்பசுக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து தேசிய கடற் ஆராய்ச்சி மையத்தின் திட்ட விஞ்ஞானிகள் ருக்மினி ஷேகர், ஆனந்த் பாண்டே, சத்தியபாமா கல்லூரி கடற் ஆராய்ச்சித்துறை பேராசிரியர் அமித்குமார், ஓம்கார் பவுண்டேசன் தன்னார்வ அமைப்பின் இயக்குனர் பாலாஜி, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் மற்றும் வனத்துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் மனோரா பகுதியைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகளுக்கு கடற்பசுக்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments