13 ஆயிரம் அடி உயரத்தில் உலகிலேயே நீளமான இரட்டை சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் ரூ.55,600 கோடி திட்டங்களும் தொடக்கம்




அருணாசல பிரதேசத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் உலகிலேயே மிகவும் நீளமான இரட்டை சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நேற்று திறந்துவைத்தார்.

ரூ.825 கோடி

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள தவாங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பலிபாரா-சாரிதுவார்-தவாங் சாலை பிரதான சாலையாக உள்ளது.

ஆனால் கனமழையால் ஏற்படும் நிலச்சரிவு, பனிப்பொழிவு போன்ற நிகழ்வுகளால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

எனவே இங்குள்ள சேலாவில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து எல்லை சாலை அமைப்பினர் இந்த சுரங்கப்பாதை பணிகளை தொடங்கினர். அதன்படி சுமார் 13,000 அடி உயரத்தில் ரூ.825 கோடியில் இரட்டை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இது உலகிலேயே மிகவும் நீளமானதாக கருதப்படுகிறது.

அனைத்து காலநிலையிலும் இயங்கும்

இதில் ஒரு சுரங்கப்பாதை 1,003 மீட்டரில் ஒருவழி கொண்டதாக உள்ளது. இரண்டாவது பாதை 1,595 மீ. நீளமுடையது. இதில் அவசர காலங்களில் வெளியேறுவதற்கான வழிகள் அடங்கி இருக்கிறது. மேலும் 8.6 கி.மீ நீளம் கொண்ட அணுகு மற்றும் இணைப்புச் சாலைகளையும் கொண்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை மூலம் அனைத்து காலநிலைகளிலும் இந்த பகுதியில் போக்குவரத்து நடைபெற வசதி ஏற்பட்டு உள்ளது. அத்துடன் ராணுவமும் விரைவாக எல்லையை அடைய வழி ஏற்பட்டு இருக்கிறது.

இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அருணாசல பிரதேச அரசு போக்குவரத்து கழக பஸ் போக்குவரத்தை இதன் வழியாக கொடியசைத்து தொடங்கி வைத்து அவர் சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ரூ.55,600 கோடி திட்டங்கள்

இந்த நிகழ்ச்சியில் சேலா சுரங்கப்பாதை உள்பட மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அருணாசல பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ரூ.55,600 கோடி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதில் அருணாசல பிரதேசத்தில் மட்டுமே ரூ.41,000 கோடிக்கான பணிகள் நடந்துள்ளன. இதில் முக்கியமாக, பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்ட 35,000 வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments