புதுக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி பஸ் கண்ணாடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு




புதுக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது ஆம்னி பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து பஸ் கண்ணாடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிளில் சென்றனர்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 27). இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் வேலைக்கு செல்வதற்கு வசதியாக புதுக்கோட்டை பெரியார் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்தார். சுப்பிரமணியனின் மனைவி சுஷ்மிதா (26). இவர்களது மகள் ஹரிணி (3).

நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன் திருவப்பூர் கோவில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அவர் ஓட்டினார். முன்பகுதியில் மகள் ஹரிணியும், பின்னால் மனைவி சுஷ்மிதாவும் அமர்ந்திருந்தனர்.

தந்தை-மகள் சாவு

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணியன், ஹரிணி ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

சுஷ்மிதாவும் படுகாயமடைந்தார். திருவிழா நேரம் என்பதால் பொதுமக்கள் கூட்டம் அந்த பகுதியில் அதிகமாக இருந்த நிலையில், விபத்தை கண்டதும் ஆத்திரத்தில் பொதுமக்கள், அந்த ஆம்னி பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்சில் இருந்த சாவியை பிடுங்கி தூக்கி வீசினர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.

லேசான தடியடி

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகா்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்த சுஷ்மிதாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களையும் கலைந்து செல்ல நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும் கூட்டம் கூடியபடியே இருந்த நிலையில் லேசான தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். அதன்பின் பஸ்சில் இருந்த பயணிகளை இறக்கி விட்டு, மாற்று பஸ்சில் அவர்கள் சென்னை செல்ல போலீசார் ஏற்பாடு செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய பஸ்சை மீட்டு திருக்கோகர்ணம் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

போலீசார் விசாரணை

விபத்து நடந்ததும் ஆம்னி பஸ் டிரைவரான மதுரை கொட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன் (34) அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர் அவர் போலீசில் சரண் அடைந்தார்.

இந்த விபத்து தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழா நேரத்தில் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments