இராமநாதபுரம் அருகே பேருந்தில் தவறவிட்ட 15 பவுன் நகைகளை மீட்டு கொடுத்த ‘டைம் கீப்பர்’



இராமநாதபுரம் அருகே பேருந்தில் தவறவிட்ட 15 பவுன் நகைகளை டைம் கீப்பர் மீட்டு கொடுத்தார்.

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட அரசு போக்குவரத்து கழக விரைவு பேருந்து நேற்று காலை 11.30 மணி அளவில் ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தை மதுரையை சேர்ந்த டிரைவர் ஆசைத்தம்பி ஓட்டினார். டி.கல்லுப்பட்டியை சேர்ந்த கேசவ விநாயகம் கண்டக்டராக பணிபுரிந்தார். பேருந்தில் இராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சர்வீஸ் ஸ்டேஷன் வைத்துள்ள இம்ரான் கான் தனது குடும்பத்தினருடன் பாம்பனில் ஏறி உச்சிப்புளி வரை பயணம் செய்தார். உச்சிப்புளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய இம்ரான் கான் குடும்பத்தினர் பேருந்தில் தங்களது கைப்பையை வைத்துவிட்டு இறங்கிவிட்டனர். வீட்டிற்கு சென்றதும் இம்ரான்கான் குடும்பத்தினர் கைப்பையை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் துணிமணிகள், 15 பவுன் நகைகள் வைத்திருந்ததால் பதற்றம் அடைந்தனர். இதனால் இம்ரான் கான் இராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கு பணியில் இருந்த டைம் கீப்பர் வடிவேல்(வயது 50) என்பவரிடம் நடந்த விவரத்தை கூறினார். 

இதையடுத்து வடிவேல் உடனடியாக அந்த பஸ் கண்டக்டர் கேசவ விநாயகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவரும் பேருந்தில் பார்த்தபோது அந்த பை அதே இடத்தில் இருந்ததை கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த பை இம்ரான்கானிடம் ஒப்படைக்கப்பட்டது. டைம்கீப்பர் வடிவேலுவின் துரித முயற்சியால் ரூ.8 லட்சம் மதிப்பிலான 15 பவுன் நகைகள் திரும்ப கிடைத்தது. அவரை அதிகாரிகளும், பயணிகளும் பாராட்டினர். 

டைம் கீப்பர் வடிவேல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெண் பயணி ஒருவர் தவறவிட்ட 4 பவுன் தங்க நகையை மீட்டு கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments