நாடாளுமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொழிலாளர் கமிஷனர் எச்சரிக்கை




தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. எனவே அன்றைய தினம் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊதியத்துடன் விடுமுறை

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தல், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி, தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

கட்டுமான தொழில்

தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக விடுமுறை வழங்கப்பட வேண்டும். அந்த நாளுக்கான ஊதியம் சாதாரணமாக தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறை சார்பில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புகார் தெரிவிக்க எண்கள் வெளியீடு

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்புக் கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

1. தொழிலாளர் இணை கமிஷனர் விமலநாதன். செல்போன் எண்- 9445398801. தொலைபேசி எண்- 044 24335107

2. தொழிலாளர் உதவி கமிஷனர் வெங்கடாச்சலபதி. செல்போன் எண்- 7010275131. தொலைபேசி எண்- 044 24330354

3. தொழிலாளர் உதவி கமிஷனர் சுபாஷ் சந்திரன். செல்போன் எண்- 8220613777. தொலைபேசி எண்- 044 24322749

4. தொழிலாளர் உதவி கமிஷனர் சிவக்குமார். செல்போன் எண்- 9043555123. தொலைபேசி எண்- 044 24322750.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments