கோபாலப்பட்டிணத்தை உலுக்கிய படுகொலை சம்பவம்: நைனா முகமது கம்பியால் அடித்துக்கொலை- சிறுவன் உள்பட 4 பேர் கைது! முக்கிய குற்றவாளிக்கு காவல்துறை வலைவீச்சு!!






மீமிசல் அருகே, வியாபாரி சந்தேக மரணம் வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் நைனா முகமது (வயது 42). இவர் மீமிசல் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். கடந்த 22-ந் தேதி வழக்கம்போல் கடைக்கு சென்ற அவர், இரவில் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவ்வழியே சென்றவர் ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு நைனா முகமது அடிபட்டு கிடப்பதாக தகவல் தெரிவித்தனர்.

அப்போது அவர் கோபாலப்பட்டிணம் முக்கிய சாலையில் தலையில் காயத்துடன் கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை மீமிசல் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் நைனா முகமது அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும், எனவே இது குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், அவரது மனைவி ரம்ஜானியா மீமிசல் போலீசில் புகார் அளித்தார். மேலும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அத்துடன் நைனா முகமதுவின் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், அவரது குடும்பத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 25-ந் தேதி நைனா முகமதுவின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை வீடியோ பதிவும் செய்யப்பட்டது.

இருப்பினும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை நைனா முகமதுவின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி, அவரது உடலை பெற உறவினர்கள் மறுத்துவிட்டனர். இதற்கிடையே இந்த வழக்கு சம்பந்தமாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் மற்றும் மீமிசல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சம்பவத்தன்று அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஒரு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களில் அந்த வழியாக சென்றவர்களை பற்றிய விவரம் அறிந்து, அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, கம்பியால் தாக்கி நைனா முகமது கொலை செய்யப்பட்டதும், முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

இதையடுத்து சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, இது தொடர்பாக கோபாலபட்டிணம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மகன் முகமது உசேன் (29), மற்றொரு சாகுல் ஹமீதுவின் மகன் முஸ்தமின் (21), சாதிக் பாட்ஷாவின் மகன் சல்மான் கான் (20) மற்றும் 18 வயதுடைய சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதையடுத்து 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால்தான் கொலைக்கான காரணம் என்ன என்பது முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: தினத்தந்தி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments