கல்விச்சான்றிதழ்களை பாதுகாக்க மாணவர்களுக்கு கைகொடுக்கிறது, தமிழக அரசின் இ-பெட்டகம் இனி எங்கும், எப்போதும் பதிவிறக்கம் செய்யலாம்




கல்விச்சான்றிதழ்களை பாதுகாக்க மாணவர்களுக்கு கைகொடுக்கிறது தமிழக அரசின் இ-பெட்டகம் செயலி. இனி எங்கும், எப்போதும் அதனை பதிவிறக்கம் செய்யலாம்.

மத்திய அரசு செயலி

கடந்த காலங்களின் அரசின் சேவைகள் எல்லாம் காகித மயமாக இருந்தன. அரசிடம் இருந்து ஒரு சான்றிதழை பெற்றுவிட்டு, அது தொலைந்து விட்டால் மீண்டும் அதனை பெறுவது என்பது குதிரை கொம்பான விஷயம். அதேபோல் அந்த சான்றிதழை நாம் பாதுகாப்பாக வைத்திருப்பதும் மிகவும் சிரமமான விஷயமாக இருந்தது.

ஆனால் இப்போது டிஜிட்டல் உலகில் அரசின் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் முறையிலேயே நடக்கிறது. மத்திய அரசு தான் வழங்கும் அனைத்து சான்றிதழ்களையும் மக்கள் 24 மணி நேரமும் எடுத்து கொள்ளும் விதமாக ‘டிஜிலாக்கர்’ செயலியை அறிமுகம் செய்து உள்ளது. அதன் மூலம் ஆதார் கார்டு, பான்கார்டு, ஓட்டுனர் உரிமம் உள்பட 1,703 துறைகள் மற்றும் சேவை சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியை இதுவரை 27 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். மொத்தம் 673 கோடி சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் ‘டிஜிலாக்கரை’ போல, தமிழக அரசு கடந்த 2023-ம் ஆண்டு ‘இ-பெட்டகம்’ என்ற செயலியை அறிமுகம் செய்தது. அதாவது தமிழக அரசு தரும் அத்தனை சேவைகளும் அதில் இணைக்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் தற்போதைய நிலையில் சுமார் 30 சான்றிதழ்கள் மட்டுமே அதில் பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆதார் எண்

மாணவர்களுக்கு பயன் அளிக்கும் விதமாக கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் பத்தாம் வகுப்பு சான்றிதழ்கள், நர்சிங் பட்டய படிப்பு சான்றிதழ், டிப்ளமோ பார்மசி படிப்பு ஆகியவற்றை பாதுகாத்து வைத்து கொள்ளலாம். அதேபோல் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் உள்பட 27 சான்றிதழை சேமித்து வைக்க முடியும். இந்த இ-பெட்டகம் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது https://www.epettagam.tn.gov.in இணையதளம் மூலமும் பயன்படுத்தலாம். அதில் முதலில் நமது ஆதார் எண் கொடுக்க வேண்டும். உடனே நமது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும். அதில் வரும் நம்பரை பதிவிட்டால் இ-பெட்டகத்தை பயன்படுத்த தொடங்கி விடலாம்.

கவலை இல்லை

இந்தாண்டு பிளஸ்-2 முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளிவருகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 10-ந்தேதி வருகிறது. இந்த சான்றிதழ்களை மாணவர்களுக்கு அரசு கொடுக்கும் பணியை தொடங்கும் போதே இ-பெட்டகத்திலும் இதனை நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே மாணவர்கள் இ-பெட்டகத்தை பதிவிறக்கம் செய்து தங்களது சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பெட்டகத்தில் சேமித்து வைக்கப்படும் இந்த சான்றிதழ்களை மீண்டும் எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அதேவேளையில் ஏற்கனவே படித்து முடித்த மாணவர்களும் இ-பெட்டகத்தில் மூலம் 2016-ம் ஆண்டு முதலான சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் ஏற்கனவே பெற்ற வருவாய்த்துறை சான்றிதழையும் நமது ஆதார் எண் கொடுத்து மீண்டும் பெறலாம். எனவே இனி சான்றிதழ்கள் தொலைந்து போய் விட்டது என்ற கவலை இல்லாமல் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் அதனை இ-பெட்டகம் மூலம் எளிதாக பெறலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments