பகல் நேரத்தில் நேரடி வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்




தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.பொது மக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை பொது சுகாதாரத் துறை வழங்கி வருகிறது.

ஆனாலும், கட்டுமானம் சார்ந்த பணியாளர்களும், தெருக்களில் வியாபாரம் செய்பவர்களும் நேரடி வெயிலில்இருக்கும் சூழல் உள்ளது. இதனால், பலர் உடல் உச்ச வெப்பநிலை (ஹீட் ஸ்ட்ரோக்) பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதியாவதும், சிலர் உயிரிழப்பதும் நிகழ்கிறது.

இதைத் தடுக்க, தொழில் நிறுவனங்களும், கட்டிட உரிமையாளர்களும் தொழிலாளர் நலன் கருதி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் பல மாவட்டங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. அந்த தட்பவெப்ப நிலையில் நேரடியாக பணியாற்றும்போது உடலில்உடனடியாக நீர்ச்சத்து இழப்பு ஏற்படும்.

அதை அலட்சியப்படுத்தினால் ஒரு கட்டத்தில் உடல் உறுப்புகளின் இயக்கம் தடைபடும். அத்தகைய நிலை ஏற்படும்போது மருத்துவ சிகிச்சைகள் விரைந்து கிடைக்காவிடில் உயிரிழப்பு நேரிடலாம்.

எனவே, கட்டுமானப் பணியாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், வியாபாரிகள் என நேரடி வெயிலில் பணியாற்றக் கூடியவர்கள் அனைவரது பணி நேரத்தைமாற்றியமைக்க தொழில் நிறுவனங்களும், உரிமையாளர்களும் முன்வர வேண்டும்.

அதிகாலையிலிருந்து காலை வரையிலும், அதன்பின்னர் மாலையிலிருந்து இரவு வரையிலும் பணியாற்றலாம். நீர்ச்சத்து இழப்பு ஏற்படாத வகையில் ஓஆர்எஸ் கரைசல், குடிநீர் வசதிகளை ஊழியர்களுக்கு செய்து தர வேண்டும் என்றார்.

தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் 110 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், மே மாதம் முடியும் வரை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும். அதனால், மதிய வேளையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். நோயாளிகள், கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஐஸ் போடாமல் பழச்சாறு அருந்தலாம். இளநீர் பருகலாம். இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். பயணத்தின் போது பாட்டிலில் எடுத்து செல்லுங்கள்.‌

அனைவரும் காலையிருந்தே மோர் மற்றும் நீராகாரங்களை அடிக்கடி உட்கொள்ளுங்கள். காபி, டீ இன்னும் ஒரு மாதத்திற்கு வேண்டாம். காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிட்டு வர பித்தம் தணியும். முதலுதவி போல எலுமிச்சை எப்போதும் வீட்டில் இருக்கட்டும். மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் வேண்டாம்.

வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மூளையில் இருந்து வரும் நரம்புகள், ஒலியின் வேகத்தை விட அதிக ஆற்றலை செலுத்தி என்ன நடக்கிறது என அறிய முயற்சி செய்யும். அந்த வேகத்தை ரத்த நாளங்கள் தாங்க முடியாமல் வெடித்து விட வாய்ப்புண்டு. உடனே அருந்த வேண்டுமென்றால் சிறிதளவு மிதமான வெந்நீர் அருந்தினால் உடல் சமநிலை அடையும்; ஆபத்தில் இருந்தும் தப்பலாம். மண் பானை நீர் நம்மை எல்லா காலத்திலும் காக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments