‘தமிழ் புதல்வன்’ திட்டம் மூலம் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் பணி ஜூலை மாதம் தொடக்கம் தலைமைச்செயலாளர் தகவல்




‘தமிழ் புதல்வன்’ திட்டம் மூலம் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் பணி ஜூலை மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.

கல்லூரிக்கனவு நிகழ்ச்சி

‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பிளஸ்-2 வகுப்பை முடித்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் பிளஸ்-2 படிப்பை நிறைவு செய்து தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு-2024 நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது. இதேபோல், திருச்சி, கோவை, நாகப்பட்டினம், மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியை தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தொடங்கி வைத்தார். இதில் முதல்-அமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன், தொடக்கக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரங்குகள்

நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் அடுத்தகட்டமாக என்ன மாதிரியான படிப்புகளை படிக்கலாம்?, என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன?, துறை சார்ந்த வேலைகளில் சேருவதற்கு என்ன படிப்புகளை தேர்வு செய்து படிக்க வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

இதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் கல்லூரிக் கனவு என்ற கையேடும் வழங்கப்பட்டன. மேலும் என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல், சட்டம், மருத்துவம் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகள் சார்ந்த வல்லுனர்கள் அறிவுரை வழங்கினர்.

அதுதவிர, ஆடிட்டோரியத்துக்கு அருகில் மேற்சொன்ன படிப்புகளை சார்ந்த அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. அதில் மாணவ-மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெளிவுப்பெற்றனர்.

கல்வி சிறந்த முதலீடு

நிகழ்ச்சியில் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது:-

தமிழ்நாட்டில் மாணவர்களை உலகை வெல்லும் சாதனையாளர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புரட்சிகர திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. நான் முதல்வன் திட்டம் என்பது, ஒவ்வொரு மாணவர்களுக்கும் கல்வி, தொழில்சார் கனவுகளை தொடருவதற்கு தமிழ்நாடு அரசின் அர்ப்பணிப்பாக இருந்து வருகிறது.

கல்விதான் சிறந்த முதலீடு. அதனை யாரும் எடுக்க முடியாது. இந்த முதலீடுதான் கடைசி வரை உங்களுடனேயே இருக்கும். அரசின் பலத் திட்டங்களை பயன்படுத்தி, மாணவர்கள் தங்களுடைய லட்சியங்களை அடைந்து முன்னேறுவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அனைவரும் விஞ்ஞானிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தொழில் முனைவோர்களாக முடியும். அதற்கேற்றாற்போல் உயர்கல்வியை பெற்று வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் புதல்வன் திட்டம்

பின்னர் சிவ்தாஸ் மீனா நிருபர்களிடம் கூறுகையில், ‘உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம் இருக்கிறது. ஆனால் நம்முடைய நோக்கம் என்பது, பிளஸ்-2 முடிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரையும் உயர்கல்வியில் 100 சதவீதம் சேர்ப்பதுதான். அந்த வகையில்தான் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

உயர்கல்வியில் சேராமல் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களையும் படிக்க வைப்பதற்காக குழு அமைக்க உள்ளோம். 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படித்து முடிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் இருக்கிறது. மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதனால் 20 முதல் 25 சதவீதம் கூடுதலாக உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.

அதேபோல், அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ‘தமிழ் புதல்வன் திட்டம்' மூலம் மாதம் ரூ.1,000 வழங்கும் பணி வருகிற ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டங்களை சரியாக கொண்டுசெல்லும்போது, கூடுதல் மாணவர் சேர்க்கை இருக்கும் என்று நம்புகிறோம்' என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments