வெப்ப அலை வீசுவதால் கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு




தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் கோடைவிடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

வாட்டி வதைக்கிறது

தமிழகத்தில் கடந்த பல நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. இதில் அக்னி நட்சத்திரமும் சேர்ந்துகொண்டு மக்களை வாட்டி வதைக்கிறது. சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. பெரியவர்களாலும் வெளியே செல்ல முடியவில்லை. கோடை விடுமுறை காலத்தில் சில பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சிறப்பு வகுப்புகளை நடத்தும். தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு அதுபோன்ற வகுப்புகள், பயிற்சிகளை நடத்துவது வழக்கமாக உள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பு

ஆனால் இந்த ஆண்டு அவற்றை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கோடை காலத்திற்கான வெப்ப அலை குறித்த அறிவிக்கையில், நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தீபகற்ப பகுதிகளில் மார்ச் முதல் மே மாதம் வரை அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும்; வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வெப்பம்

மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் வட தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பைக் காட்டிலும் 3 முதல் 5 டிகிரிவரை அதிகமாக பதிவாகியுள்ளது. எனவே வெப்ப அலையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே தலைமைச் செயலாளர் தலைமையிலும், வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையிலும் பல் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வருகிற 16-ந் தேதிவரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் 36-40 டிகிரி வரை வெப்பம் பதிவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களில் கடுமையான வெப்பமும், வெப்ப அலைக்கு நிகரான பருவநிலையும் நிலவி வருவதால், பொதுமக்கள் வெப்பம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.

சிறப்பு வகுப்புகள் கிடையாது

வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து சிறுவர், சிறுமியரின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் கருதி, கோடை விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் எல்லா வகையான பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதனை உறுதி செய்ய அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

© 2024 All Rights Reserved. Powered by
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments