பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தல்




பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.

குடிநீர் தொட்டி கட்டுமான பணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மற்றும் பேரூராட்சிகள் துறையின் சார்பில், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் வழங்கிடும் பொருட்டு மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளருமான நாகராஜன் நேற்று பார்வையிட்டார். அப்போது கலெக்டர் மெர்சி ரம்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அன்னவாசல் பகுதியில் புதிதாக கட்டப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும், செங்கப்பட்டி பகுதியில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி பணிகளையும், மதியநல்லூர் ஊராட்சி, கல்லம்பட்டி கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் செயல்பாடுகளையும் அவர் பார்வையிட்டார்.

சீரான குடிநீர் வினியோகம்

மேலும் தொடர்புடைய அலுவலர்கள் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், கட்டப்பட்டுவரும் குடிநீர் தொட்டிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் அறிவுறுத்தினார். மேலும், புதுக்கோட்டை நகராட்சி, திருவப்பூரில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்கீழ், ரூ.75.06 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளை அவர் பார்வையிட்டார்.

அதன்பின்னர், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் வழங்குவது குறித்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலை வகித்தார்.

அரசு துறைகள்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வனத்துறை, பேரூராட்சிகள் துறை, வேளாண்மை- உழவர் நலத்துறை, தோட்டக்கலை -மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் வழங்குவது குறித்தும், கோடைகால வெப்பச்சலனம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), தெய்வநாயகி (இலுப்பூர்), நகராட்சி ஆணையர் ஷியாமளா, உதவி இயக்குனர்கள் சீனிவாசன் (ஊராட்சிகள்), காளியப்பன் (பேரூராட்சிகள்) உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments