தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது இயல்பைவிட அதிகம் மழை இருக்கும் என அறிவிப்பு




தெற்கு அந்தமான் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இயல்பைவிட அதிகம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீர் ஆதாரம்

நாட்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். அதேபோல், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்கும். இதில், தென்மேற்கு பருவமழையே நாட்டின் பெரும்பாலான நீர் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கணிசமான அளவே மழைப்பொழிவு காணப்படும். குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்கள் தென்மேற்கு பருவமழை காரணமாக மழைப்பொழிவை பெறும்.

தென்மேற்கு பருவமழை

பொதுவாக, தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான், தெற்கு வங்கக்கடல் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் முதல்கட்டமாக தொடங்கி அதன்பிறகு, படிப்படியாக நாடுமுழுவதும் விரிவடையும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை, மாலத்தீவு மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகள், தெற்கு வங்கக்கடல், நிகோபார் தீவுகள், தெற்கு அந்தமானின் சில பகுதிகளில் தொடங்கி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக, மே 22-ந் தேதி மாலத்தீவு மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகள், தெற்கு வங்கக்கடல், நிகோபார் தீவுகள், தெற்கு அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், நடப்பாண்டு 3 நாட்களுக்கு முன்பே பருவமழை தொடங்கி உள்ளது.

கடந்த ஆண்டு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் காலதாமதமாக ஜூன் 8-ந் தேதி தொடங்கியது. கடந்த 150 ஆண்டுகளில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது தொடர்பாக கணிப்பில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், 1918-ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே 11-ந் தேதியே தொடங்கியது. அதுவே, 1972-ம் ஆண்டில், மிகவும் காலதாமதமாக ஜூன் 18-ந் தேதி தொடங்கியது. தற்போது, தென்மேற்கு பருவமழை 3 நாட்கள் முன்னதாகவே தொடங்கி உள்ளதால், வருகிற 31-ந் தேதி, கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இயல்பைவிட அதிகம்

கோடை வெப்பத்தின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து காணப்படுகிறது.

இதன் காரணமாக, நீர் ஆதாரங்கள் வறண்டு காணப்படுகின்றன. தற்போது, ‘லாநினோ' வானிலைக்கு சாதகமாக இருப்பதால், நடப்பாண்டுக்கான தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகம் பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments