ரேஷன் கடைகளில், மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை அடுத்த மாதம் முதல் வாரம் வரை பெற்றுக்கொள்ளலாம் தமிழக அரசு அறிவிப்பு




ரேஷன் கார்டுதாரர்கள் மே மாதத்துக்கான பாமாயில், துவரம் பருப்பை வாங்காதவர்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரம் வரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நடத்தை விதிகள்

தமிழ்நாடு அரசு, சிறப்பு பொது வினியோக திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30-க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களை கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது.

இருப்பினும் அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு கடந்த 27-ந் தேதியன்று 82 லட்சத்து 82 ஆயிரத்து 702 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ துவரம் பருப்பும், 75 லட்சத்து 87 ஆயிரத்து 865 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டும் வழங்கப்பட்டு உள்ளது.

பருப்பு, பாமாயில் பெறமுடியாதவர்கள்...

24 லட்சத்து 96 ஆயிரத்து 510 கிலோ துவரம் பருப்பு மற்றும் 33 லட்சத்து 57 ஆயிரத்து 352 பாமாயில் பாக்கெட்டுகள் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்கள் பெற்றுச்செல்ல தயார் நிலையிலும், 8 லட்சத்து 11 ஆயிரம் கிலோ துவரம் பருப்பு மற்றும் 7 லட்சத்து 15 ஆயிரத்து 395 பாமாயில் பாக்கெட்டுகள் கிடங்குகளில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பொருட்டு 27-ந் தேதி வரையிலான நிலவரப்படி இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மீதம் பெறவேண்டிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்று விரைவாக கிடங்குகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு மே மாத ஒதுக்கீட்டினை இந்த மாத இறுதிக்குள் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் மே மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜூன் மாதம் (அடுத்த மாதம்) முதல் வாரம் வரை ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.

அடுத்த மாதம் வாங்கலாம்

ரேஷன் கார்டுதாரர்களின் நன்மையை கருத்தில்கொண்டு மே மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டை ஜூன் மாதம் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments