தொண்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் தொடர் திருட்டு; 4 பேர் கைது




தொண்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல் ஊழியரிடம் பணம் திருட்டு

தொண்டி பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அலுவலக அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர் வைத்திருந்த பெட்ரோல் விற்பனை செய்த ரூ.22 ஆயிரத்தை பையுடன் திருடி சென்ற சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக பெட்ரோல் பங்க் நிர்வாகம் தொண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது பெட்ரோல் பங்க் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில், ஒருவர் ஊழியர் தூங்கி கொண்டிருந்த அறைக்கு சென்று பையுடன் திரும்பி வந்ததையும், பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதும் கேமராக்களில் பதிவாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் உத்தரவின் பேரில் தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையிலான போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தேடி வந்தனர்.

4 பேர் கைது

போலீசாரின் விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் தேவிபட்டினம் மூட்டைக்கார தெருவை சேர்ந்த முகமது நாகூர் அலி மகன் சையது இப்ராஹிம் (வயது 21), அதே பகுதியைச் சேர்ந்த காதர் பாட்ஷா மகன் ஹசன் (18) என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் இவர்கள் இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், திருவாடானை, தொண்டி, எஸ்.பி. பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடி பழைய இரும்பு கடைகளில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் பெட்ரோல் பங்கில் பணத்தை திருடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்கள் அளித்த தகவலின் பேரில் இவர்கள் இருவரும் திருடிச் செல்லும் மோட்டார் சைக்கிள்களை விலைக்கு வாங்கும் நபர்களான இரும்பு கடை நடத்தி வரும் தேவிபட்டினம் சந்தை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (55) அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (62) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து ரூ.62 ஆயிரத்து 840 ரொக்க பணத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சையது இப்ராஹிம், ஹசன், ராஜேந்திரன், பாண்டியன் ஆகிய 4 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments