அறந்தாங்கி அருகே தேர் சாய்ந்து தொழிலாளி பலி; 5 பேர் படுகாயம் தேரோட்ட முன்னேற்பாடு பணியின்போது பரிதாபம்




அறந்தாங்கி அருகே கோவில் தேரோட்ட முன்னேற்பாடு பணியின்போது தேர் சாய்ந்து தொழிலாளி பலியானார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

கோவில் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மாத்தூர் ராமசாமிபுரம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 4 மணி அளவில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கோவிலின் அருகே தேரில் முன்னேற்பாடு பணி நேற்று காலை நடைபெற்றது. தேரை அலங்கரிக்கும் விதமாக அதன் மேல் கம்புகளால் சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர்.

தொழிலாளி பலி

இந்த நிலையில் தேரின் மேல் பகுதியில் கலசம் வைப்பதற்காக கயிறு கட்டி ஏற்றும் பணி நடந்தது. அப்போது தேரில் பொருத்தப்பட்டிருந்த கம்புகள் சரிந்து விழுந்து, தேரும் சாய்ந்தது. அந்த நேரத்தில் தேரின் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் மீது தேர் மேல் பொருத்தப்பட்டிருந்த கம்புகள் விழுந்தது. இதில் தேரை அலங்கரிக்கும் பணிக்கு வந்த மாத்தூர் ராமசாமிபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 70) உள்பட 6 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே மகாலிங்கம் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

5 பேருக்கு சிகிச்சை

இதற்கிடையே, காயமடைந்ததில் மாத்தூர் ராமசாமிபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (34), அழகர் (55), கீரமங்கலத்தை சேர்ந்த கோபு (40), சேந்தகுடியை சேர்ந்த ஆறுமுகம் (40), கீரமங்கலம் மேலக்காடுவை சேர்ந்த கணேசன் (40) ஆகிய 5 பேர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயகுமார், அழகர், கோபு, கணேசன் ஆகியோர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், ஆறுமுகம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

சோகம்

இந்த சம்பவத்தின் எதிரொலியாக கோவிலில் நேற்று மாலை நடைபெற இருந்த திருவிழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மேலும் சாய்ந்த தேரை ராட்சத கிரேன் மூலம் தூக்கி நிலை நிறுத்தப்பட்டது. தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் தேர் சாய்ந்து தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments