அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 10 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடியில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு




அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடியில் மேலும் 10 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு கிராம சாலைகள் மேம்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட மாடல் அரசின் இலக்கு

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். நகரம், கிராமம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து வளர்ச்சிகளையும் வழங்கி வருகிறோம். அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதையே நமது திராவிட மாடல் அரசின் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

இதில் சாலை வளர்ச்சி என்பது மிக, மிக முக்கியமானது. நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் சாலை மேம்பாட்டை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள்.

ஊரக சாலைகள்

கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள், கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு வறுமையை ஒழிப்பதில் முக்கிய காரணியாக உள்ளன.

தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் உள்ளன. ஊரகப்பகுதிகளில் உள்ள சாலைகளை மேலும் மேம்படுத்தும் விதமாக ஒரு புதிய அறிவிப்பை இப்போது நான் வெளியிட விரும்புகின்றேன்.

மக்களின் வருமானம் உயரும்

ஊரகச் சாலைகளில் செய்யப்படும் முதலீட்டிற்கும், ஊரக மக்களின் நலனிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. சாலைகளின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து சேவைகளின் மேம்பாடு என்பது ஊரகப்பகுதிகளில் வணிகச் செயல்திறனை அதிகப்படுத்துகிறது.

அதன்மூலம், இடுபொருள் செலவினைக் குறைத்து வேளாண் உற்பத்தியினை அதிகரித்து, ஊரக வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. தரமான சாலைகள், கிராமப்புற மக்களின் வருமான அளவினை உயர்த்துகிறது.

முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டு திட்டம்

கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை வழங்கி, அறிவாற்றலைப் பரவலாக்கி, சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து வளர்ச்சியைத் துரிதப்படுத்த உதவுகிறது. எனவேதான், பஸ் செல்லக்கூடிய சாலைகள், குக்கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், பல்வேறு முக்கிய சேவைகளைக் கிராமங்களுடன் இணைக்கும் சாலைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு நமது அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.

அதன்படி, கடந்த 13-1-2023 அன்று என்னால் சட்டப்பேரவையில் “முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டு திட்டம்'' என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

இந்த திட்டத்தின்கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி தற்போது வரை 8,120 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம், நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டம், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் கீழும், கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 16 ஆயிரத்து 596 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மற்றும் 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்கத் திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 10 ஆயிரம் கி.மீ. சாலை மேம்பாடு

இதன் மொத்த மதிப்பு ரூ.9 ஆயிரத்து 324 கோடியே 49 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். வருகிற 2 ஆண்டுகளில் “முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்" மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உறுப்பினர்கள் கோரிக்கை

அதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உறுப்பினர்கள் பேசினார்கள். அதில், வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலை சி்றுத்தைகள் கட்சி), நயினார் நாகேந்திரன் (பா.ஜனதா), ஜி.கே.மணி (பா.ம.க.), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) ஆகியோர், “ஊராட்சி சாலைகளை மேம்படுத்தும்போது, அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்களின் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், “தொகுதிகளில் துறைகள் சார்பில் நடைபெறும் எல்லா திட்டப்பணிகளையும் எம்.எல்.ஏ.க்கள் போய் பார்வையிட்டு ஆய்வு செய்து அரசின் கவனத்துக்கு கொண்டுவரலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது” என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments