கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி மதுவிலக்கு சட்டத்தில் அதிரடி திருத்தம் கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் வகை செய்து மசோதா நிறைவேற்றம்




கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி சேஷ சமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த 19-ந் தேதி விஷ சாராயம் குடித்த 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.

விஷ சாராயத்துக்கு 65 பேர் பலி

அவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவக்கல்லூாி ஆஸ்பத்திரிகளிலும், புதுச்சோி ஜிப்மா் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். இதனால் விஷ சாராயத்துக்கு தொடர்ந்து சாவு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது.

நேற்று முன்தினம் வரை 65 பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில் சிகிச்சைக்கு பின் குணம் அடைந்து இதுவரை 148 பேர் வீடு திரும்பியுள்ளனர். 16 பேருக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் அதிரடி மாற்றம்

விஷ சாராய சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக மொத்தம் 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் சின்னதுரை, ஜோசப்ராஜா, ராமர் ஆகிய 3 போ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே விஷ சாராய சம்பவம் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் போலீசார் பலரும் கூண்டோடு மாற்றப்பட்டனர்.

கடும் நடவடிக்கை

இந்த நிலையில் தமிழகத்தில் விஷ சாராய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும் அவர் இது தொடர்பாக விரிவான விளக்கமும் அளித்தார்.

அதேவேளையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதாக கூறி அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா

இந்த நிலையில் தமிழக அரசு விஷ சாராயத்தை அறவே ஒழிக்கும் வகையில் 1937-ம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. அந்த சட்ட திருத்த மசோதாவை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதை வழக்கு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் சிறை தண்டனை மற்றும் அபராத தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த சட்ட திருத்த மசோதா உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின் சட்டசபையில் நிறைவேறியது. இந்த சட்டம், “2024-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தம்) சட்டம்” என அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்ட திருத்த மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* 100 லிட்டருக்கு மேல் கள்ளச்சாராயம் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மது வகைகளை உற்பத்தி செய்வது இறக்குமதி-ஏற்றுமதி செய்வது, போக்குவரத்து செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குறையாமல் 7 ஆண்டுகள் வரை தண்டனையும், ஒரு ஆண்டு கால கடுங்காவல் தண்டையும், ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

வாழ்நாள் முழுவதும் சிறை

* 50 லிட்டரில் இருந்து 100 லிட்டருக்குள் உள்ள கள்ளச்சாராயத்திற்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையும், ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஒரு லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். 50 லிட்டருக்கு கீழ் உள்ள அளவுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

* கஞ்சா பயிரிடுதல் மற்றும் போதை மருந்துகள் தயாரிப்பது தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

* கள்ளச்சாராயத்தால் ஏற்படும் மரணம் தொடர்பான குற்றவாளிகளுக்கு இனி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் அவரது ஆயுட்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10 லட்சத்திற்கும் குறையாத அபராதத்தொகையும் விதிக்கப்படும்.

மெத்தனால்...

* கள்ளச்சாராயம் பயன்படுத்த வேண்டும் என்று விளம்பரம் வெளியிட்டால் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

* கள்ளச்சாராயத்தில் மெத்தனால் போன்ற ஸ்பிரிட் பொருட்களை கலந்து விற்பனை செய்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.

* கள்ளச்சாராயம் தயாரிக்கப்படும் உபகரணங்கள் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களான அசையும் சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.

வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம்

* கள்ளச்சாராயம் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் இடங்கள், வீடு, கொட்டகை, சுற்றடைப்பு, கட்டிடம், கடை, கூடாரம், சாவடி, ஊர்தி, வண்டி மற்றும் கலம் என அனைத்து பகுதிகளுக்கும் சீல் வைக்கப்படும்.

* கள்ளச்சாராயம் தொடர்பான வழக்குகளில் தண்டனை அடுத்தடுத்து பெற்றால் அவரை வேறு மாவட்டத்திற்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கலாம்.

* கள்ளச்சாராய வழக்குகளில் சிக்குபவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டுமென்றால், அதற்கு அரசு தரப்பு வக்கீல்கள் சம்மதம் தெரிவிக்க வேண்டும். அதோடு, அந்த நபர் மீண்டும் இந்த குற்றத்தில் ஈடுபடமாட்டார் என்று கோர்ட்டு கருதினால் மட்டுமே ஜாமீன் வழங்கப்படும்.

இவ்வாறு புதிய சட்டத்திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமசோதா உடனடியாக கவர்னருக்கு அனுப்பிவைக்கப்படும். அவர் ஒப்புதல் தந்த பிறகு இந்த சட்டம் அரசாணை வெளியிடப்பட்டு, பின்னர் அரசிதழில் அறிவிக்கப்பட்டு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments