அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மே, ஜூன் மாத துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படும் அமைச்சர் தகவல்




அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மே, ஜூன் மாத துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். இதுகுறித்து சட்டசபையில் நேற்று அவர் பேசியதாவது:-

தகுதியுள்ள நபர்களுக்கு ரேஷன் அட்டைகள்

தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பெறப்பட்ட 2 லட்சத்து 92 ஆயிரத்து 43 விண்ணப்பங்களில் 9 ஆயிரத்து 784 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஆதார் எண்ணுடன் சரிபார்க்கப்பட்டு ரேஷன் அட்டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன. மீதமுள்ளவற்றை பரிசீலித்து ஆய்வு செய்து தகுதியுள்ள நபர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.

முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைகளில் இருந்து 15 லட்சத்து 5 ஆயிரத்து 45 ரேஷன் அட்டைகள் முன்னுரிமையுள்ள ரேஷன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், 48 லட்சத்து 91 ஆயிரத்து 394 பேர்கள் பயன்பெற்றுள்ளனர். பொதுமக்களின் வசதிக்காக நகரங்களில் 1000 ரேஷன் அட்டைகளுக்கு மேலும், மற்ற இடங்களில் 800 ரேஷன் அட்டைகளுக்கு மேலும் உள்ள ரேஷன் கடைகளை படிப்படியாகப் பிரித்துப் புதிய கடைகளை திறந்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் இதுவரை 699 முழுநேர ரேஷன் கடைகளும், 1310 பகுதிநேர ரேஷன் கடைகளும் என மொத்தம் 2009 ரேஷன் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 3191 ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

காரணம் என்ன?

கடந்த மே மாதத்திற்கான 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி ஏப்ரல் 8-ந் தேதி அன்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டு ஏப்ரல் 17-ந்தேதி தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டது.

ஏப்ரல் 18-ந் தேதி மே மாதத்திற்கான 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பத்திரிகைகளில் விளம்பர அறிவிக்கை வெளியிடப்பட்டன. மே மாதத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் மே 2-ந் தேதி அன்று திறக்கப்பட்டு மே 6-ந் தேதி அன்று தகுதியுள்ள ஒப்பந்ததாரர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மே 12-ந் தேதி அன்று பாமாயில் ஒப்பந்ததாரர்களுக்கும் மே 13-ந் தேதி அன்று துவரம் பருப்பு ஒப்பந்ததாரர்களுக்கும் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டன.

88 சதவீதம் வினியோகம்

அதன்படி மே மாதத்திற்கான பாமாயில் பாக்கெட்டுகள் அனைத்து அங்காடிகளுக்கும் 100 சதவீதம் வழங்கப்பட்டன. துவரம் பருப்பினைப் பொறுத்தவரையில் மே மாத ஒதுக்கீடான ஒரு கோடியே 89 லட்சத்து 89 ஆயிரம் கிலோவில் ஒரு கோடியே 68 லட்சத்து 25 ஆயிரம் கிலோ, அதாவது 88 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூன் மாதத்திற்கான 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்திட ஒப்பந்தப்புள்ளி கோருவதற்காக தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரி மே 7-ந்தேதி அன்று அரசால் கடிதம் அனுப்பப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து மே மாதம் 27-ந் தேதி அன்று அனுமதி பெறப்பட்டது. அதனையடுத்து, ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்குரிய விளம்பர செய்தி தினசரி பத்திரிகைகளில் மே 28-ந்தேதி அன்று பிரசுரம் செய்யப்பட்டது.

2 மாதத்துக்கும் சேர்த்து வழங்கப்படும்

அதற்குரிய ஒப்பந்தப்புள்ளியானது ஜூன் 8-ந் தேதி அன்று திறக்கப்பட்டன. அதன் பிறகு ஜூன் 11-ந் தேதியன்று தகுதியுள்ள துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களுடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு 13 ஆயிரம் டன் கனடா மஞ்சள் பருப்பு கொள்முதல் செய்வதற்கு 3 ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் ஒரு கோடியே 10 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்வதற்கு 4 ஒப்பந்ததாரர்களுக்கும் ஜூன் 13-ந்தேதி அன்று கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு மேலும் கூடுதலாகத் தேவைப்படும் துவரம் பருப்பினைப் பெறும் விதமாக ஏற்கனவே மே மாதத்திற்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்ட துவரம் பருப்பு 4 ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதலாக 25 சதவீதத்துக்கு உரிய 3 ஆயிரத்து 750 டன் துவரம் பருப்பிற்கான கொள்முதல் ஆணைகள் ஜூன் 15-ந் தேதி அன்று வழங்கப்பட்டுள்ளன. அதனைத் தவிர, மே மாதத்திற்கான பொருட்களை ஜூன் மாதம் முழுவதும் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மே, ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டு அளவினை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments