இராமநாதபுரம் மாவட்ட விமான நிலைய பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை






இராமநாதபுரம் மாவட்ட விமான நிலைய பணிகளை விரைந்து துவங்கிட வேண்டும்,  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய 
விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை விடுத்தார் 

இதுகுறித்து ஒன்றிய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களிடம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி விடுத்துள்ள கோரிக்கையில்,

என்னுடைய நாடாளுமன்ற தொகுதியான ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு நெடுங்காலமாக கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றோம்.

அதிகமாக வெளிநாடுகளில் பணிபுரிபவர்களையும் வெளிநாடுகளில் வணிகம் செய்பவர்களையும் கொண்ட மாவட்டம் ராமநாதபுரம்.

இது மட்டுமல்லாது பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியா முழுதிலும் இருந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.

இப்படி இருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றோம்.

கடந்த 17 ஆவது மக்களவையில் நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் விரைவில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

ஆனால் அதற்கான ஆயத்த பணிகள் இன்னும் தொடங்கப்படாமலேயே இருக்கின்றது.

எனவே விரைந்து பணிகளை துவங்கி ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைத்து விமான சேவையை தொடங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எனது தொகுதிக்குட்பட்ட பலர் மலேசியாவில் பணி புரிபவர்களாக, வணிகரீதியாக வசிப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு வந்து செல்லும் வகையில் மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே அவர்களின் சிரமத்தை போக்கும் வண்ணம் மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
எனவே அங்கு வசிக்கும் மக்கள் சிரமமின்றி சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையையும் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments