கணவரின் மது பழக்கத்தை நிறுத்த பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகை-பணம் நூதன திருட்டு! மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு!!




கணவரின் மது பழக்கத்தை நிறுத்த பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகைகள், பணத்தை நூதன முறையில் திருடி சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மது பழக்கத்தை நிறுத்த பரிகாரம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ஆம்பூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 38). இவரது மனைவி விஜயா (32). நேற்று விஜயா மற்றும் அவரது நாத்தனார் செல்வி ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அவர்களது வீட்டின் வழியாக மர்மநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கை, கால் வலி மற்றும் மது பழக்கத்தை நிறுத்த மூலிகை பொடி உள்ளது. மேலும் தோஷம் நீக்க பரிகாரம் செய்யப்படும் என்று கூறியவாறு சென்றுள்ளார்.

அப்போது அந்த மர்ம நபரை தனது வீட்டிற்கு அழைத்த விஜயா தனது கணவர் தினமும் மது குடித்து வருகிறார். அதை நிறுத்துவதற்கு பரிகாரம் செய்து கொடுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் மது பழக்கத்தை நிறுத்த பரிகாரம் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் செலவாகும் என்று கூறியுள்ளார். அதற்கு விஜயா தன்னிடம் ரூ.3,500 மட்டுமே இருக்கிறது. பரிகாரம் செய்து கொடுங்கள் என்று கூறியுள்ளார். பின்னர் வீட்டின் முகப்பு அறையில் அந்த நபர் அமர்ந்து பரிகாரம் செய்வதற்கான சில பொருட்களை கேட்டுள்ளார்.

3 பவுன் நகைகள்

இதையடுத்து விஜயா, செல்வி ஆகிய இருவரும் சில பொருட்களை கொண்டு வந்து அந்த நபரிடம் கொடுத்துள்ளனர். அப்போது மேலும் சில பொருட்கள் தேவைப்படுகிறது. அதை கடைக்கு சென்று வாங்கி வாருங்கள் என்று செல்வியை அனுப்பி வைத்துவிட்டு விஜயாவை மட்டும் தனது முன் அமர வைத்து அந்த மர்ம நபர் பரிகாரம் செய்துள்ளார்.

அப்போது அவர் விஜயாவிடம் விபூதியை கொடுத்து பூசிக்கொள்ள செய்துள்ளார். அதை தொடர்ந்து பரிகாரம் செய்வதற்கு கழுத்தில் அணிந்திருக்கும் தாலி மணி மற்றும் தோடு மூக்குத்தி, வீட்டில் மோதிரம் வைத்திருந்தால் அவற்றையும் எடுத்து வந்து இங்கே வையுங்கள். அதை வைத்து பரிகாரம் செய்தால் தான் உங்களது கணவரது குடிப்பழக்கத்தை நிறுத்த முடியும் என்று கூறியவுடன் விஜயா தான் அணிந்திருந்த தாலி மணி, தோடு மூக்குத்தி வீட்டிலிருந்த மோதிரம் உள்பட 3 பவுன் தங்க நகைகளை கழற்றி வைத்துள்ளார்.

பிரம்மை பிடித்தவர் போல்...

அப்போது பரிகாரம் செய்தவுடன் அந்த மர்ம நபர் விஜயாவின் முகத்தில் விபூதி போன்ற ஒரு பவுடரை தூவியுள்ளார். உடனே விஜயா சுயநினைவை இழந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர் அங்கு வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.3,500 ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தலைமறைவானார். கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற செல்வி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது விஜயா பிரம்மை பிடித்தவர் போல் அமர்ந்திருந்தார்.

கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் தோடு மூக்குத்தி எங்கே என்று விஜயாவிடம் கேட்டதற்கு பரிகாரம் செய்தவர் கழட்டி வைக்க சொன்னார். அதனால் கழட்டி வைத்தேன் என்று கூறியுள்ளார். அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த செல்வி மொபட்டை எடுத்துக் கொண்டு கடைகள் மற்றும் நால்ரோடு ஆகிய பகுதிகளில் சென்று தேடிப் பார்த்தபோது அந்த மர்ம நபர் கிடைக்கவில்லை.

மர்மநபருக்கு வலைவீச்சு

இதுகுறித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் விஜயா புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் பெண்ணை ஏமாற்றி கணவரின் மது பழக்கத்தை நிறுத்த பரிகாரம் செய்வதாக கூறி 3 பவுன் தங்க நகைகள், ரூ.3,500 ஆகியவற்றை நூதன முறையில் திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments