கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பணம் பறிக்கும் மர்மகும்பல்: நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை!




கல்வி உதவித்தொகை வந்துள்ளதாக கூறி கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பணம் பறிக்கும் மர்மகும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதவித்தொகை வந்துள்ளதாக கூறி...

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் ஒரே பள்ளியில் படித்து தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலரது வீட்டிற்கு கடந்த 2 நாட்களாக செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் மறுமுனையில் பேசும் மர்மநபர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன் என்றும், மாணவிகளின் பெயர், அவரது தாய் பெயர், மாணவிகள் 1-ம் வகுப்பு படித்த பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை படித்து முடித்த பள்ளி விபரங்கள் வரை சரியாக கூறுகின்றனர்.

அதன்பின்னர் மாணவி கல்லூரியில் தொடர்ந்து படிக்க உங்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.38,500 வந்துள்ளது. எனவே அதனை நாங்களே உங்களுக்கு போன் மூலம் அனுப்பி வைக்கிறோம் என்று கூறி பேசியுள்ளனர். இதனை நம்பிய சில பெற்றோர்கள் தங்களது வங்கி பரிவர்த்தனைகளை கூற மர்ம நபர்கள் பணம் அனுப்பியதாக ஒரு தவறான ரசீதை முதலில் அனுப்பி பெற்றோர்களை ஏமாற்றி அவர்களது வங்கி கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் பெற்றுள்ளனர்.

கோரிக்கை

இதே போல் அன்னவாசலில் கடந்த 2 நாட்களில் 3 மாணவிகளின் வீட்டிற்கு மர்ம நபர்கள் செல்போனில் பேசியுள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைமில் பெற்றோர் புகாரும் அளித்துள்ளனர். மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை படித்த விபரங்கள், பெற்றோர் விபரங்கள் அவர்களது செல் போன் எண்களை வைத்து இதுபோன்று பணம் பறிக்கும் மர்மநபர்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மர்ம நபர் பெற்றோர்-மாணவிகளிடம் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments