திருச்சி -அபுதாபி இடையே 4 கூடுதல் விமான சேவைகள் -ஆகஸ்ட் 11 முதல் தொடக்கம்




திருச்சி -அபுதாபி இடையே, ஆகஸ்ட் 11-ஆம் தேதியிலிருந்து கூடுதலாக 4 விமான சேவைகள் தொடங்கப்படவுள்ளது. இத்துடன் வார நாள்களில் மொத்தம் 7 விமான சேவைகள் இயக்கப்படவுள்ளதால், வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையிலிருந்து இயக்கப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திருச்சி வழியாக அபுதாபிக்கு வாரம் ஒரு சேவை மட்டுமே வழங்கி வந்தது. பின்னர் நிர்வாகக் காரணங்களால் அந்தச் சேவையும் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், வார நாள்களில் செவ்வாய்க்கிழமை மட்டும் மாலை 5.30-க்குப் புறப்பட்டு செல்லும் வகையில் ஒரே ஒரு விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீண்டும் தொடங்கியது. அதன் பின்னர் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் என தற்போது வார நாள்களில் 3 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், அபுதாபிக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து, கூடுதல் விமானங்களை இயக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. திருச்சி மத்திய மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகள், விமானத்தில் இருக்கைகள் கிடைக்காத நிலையில், வேறு விமான நிலையங்களை நாடும் நிலை உள்ளது. உதாரணமாக, சென்னை, கோவை, திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து பயணிக்கின்றனர். மேலும் சிலர் திருச்சியிலிருந்து இலங்கை சென்று அங்கிருந்து மாற்று விமானம் மூலமும் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி -அபுதாபி இடையே வாரநாள்களில் 4 சேவைகளை இயக்கவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சேவை வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 7.30 மணிக்குப் புறப்பட்டு 10 மணிக்கு அபுதாபியை சென்றடையும். அதேபோல எதிர் மார்க்கத்தில் அங்கிருந்து புறப்படும் விமானம் மறுநாள் காலை 6.30-க்கு திருச்சியை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகளும் தொடங்கியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துபாய்க்கு செல்லும் பயணிகள் அபுதாபியிலிருந்து சாலை மார்க்கமாகவும் செல்ல முடியும் என்பதால், துபாய் செல்லும் பயணிகளும் இந்த விமானத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது.

இதுகுறித்து திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் துரை வைகோ M.P  அவர்கள் முகநூல் பக்கத்தில் பதிவில் 

திருச்சியில் இருந்து அபுதாபிக்கு வாரம் நான்கு முறை விமானம் இயக்கப்பட்ட உள்ளதாக தகவல்!  வரவேற்கத்தக்க செய்தி! 

கடந்த 01.07.2024 அன்று ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு ராம் மோகன் நாயுடு அவர்களை நேரில் சந்தித்து திருச்சி விமான சேவைகள் தொடர்பாக சில கோரிக்கைகள் வைத்தேன்.

அதில், திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய கட்டடம் பிரதமர் மோடி அவர்களால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில் கூடுதல் விமான சேவைகள் வழங்கப்பட்டால் மட்டுமே பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதற்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போதிய ஓடுதள வசதிகள் இல்லை. எனவே, விமான ஓடுபாதை விரிவாக்கப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க தேவையான நிதியை வழங்குமாறு கோரிக்கை வைத்தேன்.

அதேப்போல, இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் (BASA) படி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை வழங்கிட அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மட்டுமே துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படுகிறது. வாராந்திர சேவை அடிப்படையில் ஒரு வாரத்திற்கு 3760 இருக்கைகள் மட்டுமே இந்த விமானத்தில் நிரப்பப்படுகின்றன. இதனால் பயணக் கட்டணமும் பல மடங்கு அதிமாக உள்ளது. எனவே, திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். இதன்மூலம், திருச்சி மற்றும் அருகமை மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட மத்திய மாவட்ட மக்கள் பெருமளவில் பயனடைவார்கள் என குறிப்பிட்டு இருந்தேன்.

இந்நிலையில், தற்போது திருச்சியில் இருந்து அபுதாபிக்கு வாரம் நான்கு முறை இண்டிகோ விமானம் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இது வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. இதன்மூலம் திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்ட மக்கள் பயனடைவார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments