மதுக்கூர் அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள்-ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதல்; தாய்-மகன் உள்பட 3 பேர் பலி




தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே மோட்டார் சைக்சிள் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தாய் மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தாயார் வீட்டுக்கு...

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள விக்ரமம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர், வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதிகா(வயது 30). இவர்களது மகன்கள் மோனிஷ்(9), மவுனிஷ்(6).

இவர்களில் மோனிஷ்சுக்கு வயிற்றில் சொருகல் விழுந்ததால் அதை எடுப்பதற்காக நேற்று காலை மன்னார்குடியை அடுத்த பைங்காநாட்டில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு ஸ்கூட்டரில் ராதிகா தனது மகனுடன் சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிள்‌ ஸ்கூட்டர் மோதல்

மதுக்கூர் மன்னார்குடி சாலையில் கீழக்குறிச்சி என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்று கொண்டு இருந்த தனியார் பஸ்சை ராதிகா முந்தி செல்ல முயன்று உள்ளார்.

அதே நேரத்தில் பைங்காநாடு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருடைய மகன் விக்னேஷ்(18) மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

தாய்-மகன் உள்பட 3 பேர் பலி

இந்த விபத்தில் ராதிகா அவரது மகன் மோனிஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மோதிய வேகத்தில் இருவரது இருசக்கர வாகனங்களும் உடைந்து நொறுங்கியது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

தாய் மகன் உள்பட 3 பேர் இருசக்கர வாகன விபத்தில் பலியான சம்பவம் மதுக்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments