சட்டமன்ற குழு புதுக்கோட்டைக்கு விரைவில் வருகை: பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க வருகிற 5-ந் தேதி கடைசி நாள் கலெக்டர் தகவல்




சட்டமன்ற குழுக்கள் புதுக்கோட்டைக்கு விரைவில் வர உள்ளது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க வருகிற 5-ந் தேதி கடைசி நாளாகும் என்று கலெக்டர் தெரிவித் துள்ளார்.

மனுக்கள் குழு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2024-2025-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு, புதுக்கோட்டை மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதனையொட்டி புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள், குறைகள் குறித்து மனுக்களை (5 நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர், மனுதாரர்கள், தேதியுடன் கையொப்பமிட வேண்டும். அதனை தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை- 600 009 என்ற முகவரியிட்டு, நேரடியாகவோ, கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்ட அலுவலர், தாசில்தார் மூலமாகவோ வருகிற 5-ந் தேதிக்குள் அனுப்பலாம்.

பொதுப்பிரச்சினைகள்

மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்சினைகள் குறித்த கோரிக்கை மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையை சேர்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

ஆனால் மனுவில் தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் தொடர்பாக இருக்க கூடாது.

5-ந் தேதி கடைசி நாள்

சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும். அவ்மயம், மனுதாரர் முன்னிலையில், குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இது குறித்து, மனுதாரர்களுக்கு கலெக்டர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். மனுக்கள் அளிக்க வருகிற 5-ந் தேதி கடைசி நாளாகும். அதன்ப பிறகு பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. மேற்கண்ட தகவலை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments