மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் மத்திய விமான போக்குவரத்து மந்திரியிடம் தென் மாவட்ட எம்.பி.க்கள் மனு




மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய விமான போக்குவரத்து மந்திரியிடம் தென் மாவட்ட எம்.பி.க்கள் மனு அளித்தனர்.

மதுரை விமான நிலையம்

மத்திய விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடுவை, தென் மாவட்ட எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர், சு.வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம், நவாஸ்கனி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவரிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

இந்திய விமான நிலைய ஆணையம், மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் விமான நிலையமாக அறிவித்தது. ஆனால், தற்போது வரை மதுரை விமான நிலையம் 24 மணிநேரமும் விமான சேவைகள் செயல்படும் வகையில் இல்லை. எனவே, மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் விமான நிலையமாக மாற்ற வேண்டும். அதுபோல், மதுரை விமான நிலையத்தை முழு அளவிலான சர்வதேச விமான நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் சர்வதேச விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீபத்தில் சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை குறைக்கப்பட்டது. வணிகம், சுற்றுலா ரீதியாக அதிக அளவில் பயணிகள் மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்வதால், அந்த விமான சேவையை அதிகரிக்க வேண்டும். இதுபோல், துபாய் மற்றும் கோலாலம்பூருக்கு விமான சேவையை அதிகரிக்க வேண்டும்.

ஊழியர்கள் பற்றாக்குறை

மதுரையிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானங்களை இயக்க வேண்டும். மதுரை விமான நிலைய ஊழியர் எண்ணிக்கை, உள்துறை அமைச்சகத்தால் இரண்டு ஷிப்ட் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கும், 3 ஷிப்ட் சர்வதேச விமான போக்குவரத்துக்குமாக தீர்மானிக்கப்பட்ட அளவான 305-ஐ விட மிகக் குறைவாக 214 ஆக உள்ளது. இதனால் 24 மணி நேர சர்வதேச விமான சேவையை தருவதில் மிகப்பெரும் தடங்கல்கள் உள்ளன.

இதற்கிடையில் புதிய மனித வளத்தேவை குறித்த ஆய்வு நடத்தப்பட்டு 3 ஷிப்ட் உள்நாட்டு விமான போக்குவரத்துக்கும், 3 ஷிப்ட் சர்வதேச விமான போக்குவரத்துக்குமாக 481 ஊழியர் எண்ணிக்கையை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பரிந்துரை பரிசீலிக்கப்பட்டு அதற்கு ஏற்ப ஊழியர் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.

மதுரை ஓர் முக்கியமான நகரம். அதன் விமான நிலைய மேம்பாடு என்பது ஒட்டுமொத்த தென் தமிழகத்தின் மேம்பாட்டிற்கு பயன்படக்கூடியதாகும். ஆகவே உடனடியாக புதிய மனிதவள ஆய்வின் அடிப்படையில் ஊழியர் எண்ணிக்கையை நிர்ணயித்து பணி அமர்த்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments