சட்டப்படிப்பு படித்தவர்களிடம் வக்கீலாக பதிவு செய்ய அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது மாநில பார் கவுன்சில்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு




வக்கீலாக பதிவு செய்ய சட்டப்படிப்பு படித்தவர்களிடம் மாநில பார் கவுன்சில்கள் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

10 மனுக்கள்

சட்டப்படிப்பு படித்தவர்கள் வக்கீலாக பதிவு செய்வதற்கு மாநில பார் கவுன்சில்கள், நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக சில வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

போதிய நிதிவசதி இல்லாத சட்டம் படித்த இளைஞர்கள், வக்கீல் தொழில் செய்யும் வாய்ப்பை இது தடுப்பதாக அவர்கள் கூறியிருந்தனர்.

இப்படி தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டன.

விசாரணைக்கு பிறகு, கடந்த ஏப்ரல் 22-ந்தேதி, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

68 பக்க தீர்ப்பு

இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று இவ்வழக்கில் 68 பக்க தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

1961-ம் ஆண்டின் வக்கீல்கள் சட்டப்படி, சட்டப்படிப்பு முடித்த பொதுப்பிரிவினரிடம் வக்கீலாக பதிவு செய்ய ரூ.750-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரிடம் ரூ.125-ம் மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் வசூலிக்க மாநில பார் கவுன்சில்களுக்கோ, பார் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கோ அதிகாரம் இல்லை.

ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம்வரை கட்டணம் வசூலிப்பது, அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு வலியுறுத்தும் சமத்துவ உரிமைக்கு எதிரானது.

தடைக்கல்

ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் வக்கீல் ஆவதற்கு தடைக்கல்லாக அமைந்துவிடும். அவர்கள் மீது பாரபட்சம் காட்டுவதாக அமையும். நாடாளுமன்றத்தால் வகுக்கப்பட்ட நிதிக்கொள்கையை பார் கவுன்சில்கள் மாற்ற முடியாது. இருப்பினும், ஏற்கனவே வசூலித்த அதிகப்படியான கட்டணத்தை மாநில பார் கவுன்சில்கள் திருப்பித்தர வேண்டியது இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments